இந்தூர்: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதிச் சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்று இருக்கிறது. இந்த சூழலில் இந்த போட்டியை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தி வருகிறது.
ஆஸ்திரேலிய வீராங்கனைகள் தற்போது இந்தூரில் தங்கி வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் ஹோட்டல் ரூமில் தங்கி போர் அடித்ததால் ஊரை சுற்றி பார்க்க வெளியே சென்றுள்ளனர்.

அப்போது அங்குள்ள பிரபல உணவு விடுதியில் தேநீர் அருந்திவிட்டு இருவரும் வெளியே வந்துள்ளனர். அப்போது ஆஸ்திரேலிய வீராங்கனையை கண்ட இந்திய ரசிகர் ஒருவர் பைக்கில் இருந்து இறங்கி வந்து ஆஸ்திரேலியா வீராங்கனைகளிடம் தகாத முறையில் நடந்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள் தங்களது அணி நிர்வாகிகளிடம் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தை உறுதி செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உள்ளூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அகில் கான் என்ற நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் கிரிக்கெட் வீராங்கனைகளிடம் சில்மிஷம் செய்ததால் அவருடைய கை உடைக்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டு இருக்கிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ செயலாளர் தேவஜீத் ஷாக்கியா, இந்த விவகாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா எப்போதுமே விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற நாடு மத்திய பிரதேச போலீசாரின் நடவடிக்கைக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும். மேலும் வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். வீராங்கனைகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.