டர்பன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
1987, 1999, 2003, 2007, 2015 என்று 5 முறை வென்று அதிக முறை வென்ற அணியாக ஆஸ்திரேலியா அணியாக உள்ளது. ஐசிசி தொடர்கள் என்றாலே ஆஸ்திரேலிய அணி வேறு மாதிரியான ஃபார்மில் வந்து நிற்பார்கள். அந்த வகையில் உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் சூழலில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை ஒரு சீனியர் வீரர் கூட இல்லாமல் வென்று மிரட்டியுள்ளது.

நேற்று இரவு நடைபெற்ற 3வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் சேர்த்தார். அதிகபட்சமாக டோனவன் ஃபெரெரா 48 ரன்களும், ஹென்ரிக்ஸ் 42 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 41 ரன்களும் விளாசினர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஷேன் அப்பாட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் ஷார்ட் டக் அவுட்டாகி ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கேப்டன் மிட்சல் மார்ஷ் 15 ரன்களில் வெளியேறினார். பின்னர் இணைந்த ஹெட் - இங்லிஸ் கூட்டணி தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சிதறடித்தது. சிறப்பாக ஆடிய இங்லிஸ் 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இன்னொரு பக்கம் வெறித்தனமாக ஆடிய டிராவிஸ் ஹெட் 48 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 21 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றுள்ளது. தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இருப்பதால், ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பையில் அபாயகரமான அணியாக பார்க்கப்படுகிறது.
எந்த சீனியர் வீரர்களும் இல்லாமலேயே ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பேட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, டேவிட் வார்னர் என்று அனைத்து வீரர்களும் உலகக்கோப்பைத் தொடருக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.