இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. ஆஸி அணிக்கு பெரும் பின்னடைவு.. விவரம்
மும்பை: இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பந்துவீச மாட்டேன் என்று ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மிட்சல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பின், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
நாளை மும்பை வான்கடே மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி நடக்க உள்ளது. இதில் இரு அணிகளின் கேப்டன்களும் சொந்த காரணங்களால் விளையாடவில்லை. இதனால் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியாவும், ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக இருப்பார்கள்.

மிட்சல் மார்ஷ் பந்துவீச்சு?
ஏற்கனவே பும்ரா நீண்ட நாட்களாக ஓய்வில் உள்ள நிலையில், ஸ்ரேயாஸ் ஐயரும் காயம் அடைந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மாவும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடாதது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல் ஆஸ்திரேலியா அணியிலும் கம்மின்ஸ் இல்லை. இதுமட்டுமல்லாமல் அந்த அணியின் ஆல் ரவுண்டரான மிட்சல் மார்ஷ் நீண்ட நாட்களுக்கு பின் களமிறங்க உள்ளார்.

மிட்சல் மார்ஷ் காயம்
அதேபோல் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிட்சல் மார்ஷ் பந்துவீசப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மிட்சல் மார்ஷ் கூறுகையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மட்டுமல்லாமல், இன்னும் ஒரு மாதங்களுக்கு பிறகே நான் பந்துவீச தொடங்க உள்ளேன். கணுக்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளதால், நான் அவசரப்படாமல் இருக்க விரும்புகிறேன். ஆஸ்திரேலிய அணியிலும் அதிகளவிலான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

பேட்டிங் வரிசை
காயத்தால் நீண்ட காலமாக ஓய்வில் இருப்பதால், நான் சிறப்பாக மீண்டும் தொடங்க வேண்டும். சிகிச்சைக்கு பின் சில உள்ளூர் போட்டிகளில் விளையாடியது நல்ல உணர்வை கொடுத்தது. ஆஸ்திரேலியா அணிக்காக நிச்சயம் வெற்றியை தேடி கொடுக்க விரும்புகிறேன். ஆஸ்திரேலிய அணியில் ஏராளமான ஆல் ரவுண்டர்கள் இருக்கிறார்கள். அதனால் அணியில் உள்ள மூன்று ஆல் ரவுண்டர்களும் மூன்று போட்டிகளிலும் விளையாட வேண்டிய அவசியமில்லை. இங்கிலாந்து அணியில் 8வது வீரர் வரை நல்ல பேட்டர்கள் இருக்கிறார்கள்.

உலகக்கோப்பை
அதுபோல் ஆஸ்திரேலிய அணியிலும் சில முயற்சிகள் செய்யப்படுகிறது. பெரிய இலக்கை விரட்டி ஆஸ்திரேலிய அணி பயிற்சி செய்ய வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நடப்பாண்டு இறுதியில் இந்தியாவில் உலகக்கோப்பைத் தொடர் நடக்க உள்ளது. இங்கு அதிகளவில் சேஸிங் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு அணியில் நீண்ட பேட்டிங் வரிசை இருப்பது மிக முக்கியம் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications