சிட்னி : சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டோனிஸ் அறிவித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் ஸ்டோனிஸ் அறிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ஏற்கனவே மிட்செல் மார்ஸ் காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார். இதேபோன்று கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆகியோரும் காயமடைந்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் பங்கேற்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்த சூழலில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரும், ஆல்ரவுண்டருமான ஸ்டோனிஸ் தாம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தாம் பங்கேற்க போவதில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 71 நாள் போட்டியில் விளையாடியுள்ள ஸ்டோனிஸ் மொத்தமாக 1495 ரன்கள், 48 விக்கெட்டுகளையும் வீழ்த்திருக்கிறார். ஸ்டோனிஸ் 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய உலகக் கோப்பை வென்ற அணியில் முக்கிய வீரராக இருந்தார். இது போன்று ஆஸ்திரேலிய அணியில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை 2018 ஆம் ஆண்டு அவர் வென்றார்.
2017 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக அவர் தனி ஆளாக நின்று 146 ரன்கள் அடித்தது, அவருடைய சிறந்த செயல்பாடு ஆகும். 2015 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய அணிக்காக ஸ்டோனிஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டோனிஸ், "ஆஸ்திரேலிய அணிக்காக ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடியது என்னுடைய வாழ்நாளில் சிறந்த ஒன்று. நான் இதற்காக மிகவும் நன்றி கடன் பட்டிருக்கின்றேன்".
"இந்த பயணம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் முடிவு அவ்வளவு எளிதாக இல்லை.என்னுடைய வாழ்க்கையில் அடுத்த அத்தியாயத்திற்கு நான் செல்ல வேண்டும். இதற்காக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகின்றேன். இனி t20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்தப் போகிறேன்" என்று ஸ்டோனிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதால் அங்கு வந்து விளையாட ஸ்டோனிஸ் தயக்கம் காட்டியதாகவும் இதன் காரணமாக தான் ஒரு நாள் அணியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதாக ஸ்டோனிஸ் அறிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.