ஏன்பா.. ஆள் இருக்கும் போது நீ ஏன் ரன் ஓடுற? மறந்து போய் ரன் ஓடிய ஆஸி. வீரர்!
சிட்னி : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான செஃப்பீல்டு ஷீல்டு தொடரில் பேட்ஸ்மேன் ஒருவர் நகைச்சுவையான முறையில் ஆட்டமிழந்துள்ளார்.
விக்டோரியா அணிக்கு எதிரான போட்டியில் நியூ சவுத்வேல்ஸ் அணி வீரர் ஸ்டீவ் ஓ'கீஃப்புக்கு பந்துவீச்சின் போது தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பேட்டிங் செய்ய கடைசி நபராக இறங்கினார் ஸ்டீவ்.

ரன்னர்
அப்போதும், தனக்கு ரன்னர் ஒருவரை வைத்துக் கொண்டு தான் களமிறங்கினார். தன் முதல் பந்தை சந்தித்த ஸ்டீவ், அந்த பந்தை தட்டி விட்டு ரன் ஓட ஆரம்பித்தார்.
குழப்பம்
தனக்கு ரன்னர் இருப்பதை மறந்து விட்டு ஸ்டீவ் ரன் ஓடினார். எதிரில் இருந்த பேட்ஸ்மேன் என்ன செய்வது என தெரியாமல் ரன் ஓடினார். அதே சமயம், ஸ்டீவின் ரன்னரும் ஓடி முடித்தார். ஒரே நேரத்தில் மூன்று வீரர்களும் ரன் ஓடினர்.

ரன் அவுட் ஆனார்
ரன் ஓடி முடித்த பின்னரே ஸ்டீவ், தனக்கு ரன்னர் இருப்பது நினைவுக்கு வந்து மீண்டும் பேட்டிங் செய்த இடத்திற்கே ஓடி வந்தார். எனினும், அதற்குள் அவரை ரன் அவுட் செய்தனர் விக்டோரியா அணியினர்.

எதற்கு ரன்னர்?
இந்த ரன் அவுட்டில் வேடிக்கை என்னவென்றால், ரன்னர் என்பதே ரன் ஓட முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு தான் எனும் நிலையில், படு வேகமாக ரன் ஓடிய ஸ்டீவ் எதற்கு ரன்னர் வைத்துக் கொண்டார் என தெரியவில்லை.

வலி இருந்தால்..
மேலும், ஒருவேளை காலில் ரன் ஓட முடியாத அளவு வலி இருந்தால், நிச்சயம் ஒரு சில அடி எடுத்து வைத்த உடன் வலியின் காரணமாக தனக்கு காயம் இருப்பதையும், ரன்னர் இருப்பதையும் உணர்ந்து ரன் ஓடாமல் இருந்திருப்பார்.

ரன்னர் நடைமுறை இல்லை
இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம், ரன்னர் வைத்துக் கொள்ளும் நடைமுறை சர்வதேச போட்டிகளில் இருந்து ஐசிசியால் கடந்த 2011ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. உள்ளூர் போட்டிகளில் சில நாடுகள் ரன்னர் வைத்துக் கொள்ள அனுமதித்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications