சிட்னி: 9 ஆண்டுகளுக்கு பின் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளதாக ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர இடதுகை பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளார்.
சமகால கிரிக்கெட்டில் சிறந்த இடதுகை பந்துவீச்சாளர்களால ஷாகின் அப்ரிடி, போல்ட் ஆகியோரை விடவும் அபாயகரமான வீரர் மிட்செல் ஸ்டார்க். ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்படும் யார்க்கர் பந்துகளை கொண்டு பேட்ஸ்மேன்களின் கால்களையும் ஸ்டம்புகளையும் பதம் பார்க்கக் கூடிய பந்துவீச்சாளர் தான் மிட்செல் ஸ்டார்க். என்னதான் இது டி20 கிரிக்கெட் காலம் என்றாலும், மிட்செல் ஸ்டார்க்கின் முக்கியத்துவம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தான்.

டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதற்காக ஐபிஎல் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இதன் விளைவாக ஆஸ்திரேலிய அணிக்காக மெக்ராத்திற்கு பின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைக்கவுள்ளார். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை போன்ற ஐசிசி தொடர்கள் என்று வந்துவிட்டால் மிட்செல் ஸ்டார்க்கை கையிலேயே பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த நேரத்தில் "பீஸ்ட்" மோடில் மிட்செல் ஸ்டார்கின் பந்துகள் இருக்கும்.
இந்த நிலையில் 9 ஆண்டுகளுக்கு பின் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்று ஆர்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மிட்செல்ன் ஸ்டார்க் பேசுகையில், 2024ஆம் ஆண்டு தொடரில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன். அதனால் யாராவது என்னை ஏலத்தில் வாங்கினால், நிச்சயம் விளையாடுவேன். அதேபோல் 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு மிகச்சிறந்த தொடக்கமாகவும், பயிற்சியாகவும் ஐபிஎல் தொடர் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் ஸ்டார்க் கடைசியாக 2015ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடினார். மொத்தமாக ஆர்சிபி அணிக்காக 2 சீசன்களில் விளையாடியுள்ள மிட்செஸ் ஸ்டார்க், 27 போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இடதுகை வேகப்பந்துவீச்சாளர் என்பதால், அடுத்த ஏலத்தில் அவரை ஒப்பந்தம் செய்ய அனைத்து அணிகளும் முட்டி மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.