சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டேமியன் மார்ட்டின், கோமாவில் இருந்து மீண்டு வந்து தற்போது பேசத் தொடங்கியுள்ளளார். இதனை அவரது முன்னாள் அணியின் வீரரும், விக்கெட் கீப்பர்-பேட்டருமான ஆடம் கில்கிறிஸ்ட் உறுதிப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவின் 1999 மற்றும் 2003 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற அணிகளில் இடம்பெற்றிருந்த மார்ட்டினுக்கு பாக்சிங் டெஸ்டின் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு கோமாவுக்கு சென்றார்-
இந்த சூழலில் டேமியன் மார்ட்டின் "தற்போது பேசவும், சிகிச்சைக்கும் பதிலளிக்கவும் முடிகிறது" என்று கில்கிறிஸ்ட் தெரிவித்தார். கோமாவில் இருந்து மீண்ட பிறகு அவர் சிகிச்சைக்கு மிகச் சிறப்பாகப் பதிலளித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அவரது குடும்பத்தினர் இதை ஒரு "அற்புதம்" என்று கருதுமளவுக்கு மார்ட்டின் உடல்நிலையில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

அவரது உடல்நிலை சீராகி வருவதால், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு அவர் விரைவில் மாற்றப்படுவார் என்ற நம்பிக்கை அவரது குடும்பத்தினரிடையே எழுந்துள்ளது. இது அவருடய குடும்பத்தினரையும், ரசிகர்களையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
டேமியன் மார்ட்டின் குறித்து அவரது மணைவி அமண்டாவுடன் பேசியதாக கில்கிறிஸ்ட் தெரிவித்தார். "அனைவரிடமிருந்தும் கிடைத்த அன்பு, அக்கறை, பிரார்த்தனை ஆகியவை டேமியனின் மீட்புக்கு பெரிதும் உதவியதாக அமண்டா உறுதியாக நம்புகிறார்," என்று கில்கிறிஸ்ட் கூறினார். "பலரும் அவரது தேவைப்படும் நேரத்தில் ஆதரவளித்ததற்கு அவர்கள் பெரும் ஆசிர்வதிக்கப்பட்டதாகவும் உணர்கிறார்கள்," என்றார்.
கோமாவில் இருந்து மார்ட்டின் மீண்டு வந்துவிட்ட போதிலும், அவர் தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருவார் என கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். டேமியன் மார்ட்டின் 1992 முதல் 2006 வரை ஆஸ்திரேலியாவுக்காக 67 டெஸ்ட் போட்டிகளிலும், 208 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 1992 ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று பிரிஸ்பேனில் உள்ள காபாவில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் அவர் அறிமுகமானார்.
ஆஸ்திரேலியாவுக்காக 67 டெஸ்ட் போட்டிகளின் 109 இன்னிங்ஸ்களில் 4406 ரன்களையும், 208 ஒருநாள் போட்டிகளில் 5346 ரன்களையும் டேமியன் மார்ட்டின் குவித்தார். அவர் 2003 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 84 பந்துகளில் 88 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், இந்தியாவில் நடந்த 2004 பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் 444 ரன்கள் அடித்து "தொடரின் சிறந்த வீரர்" விருதையும் வென்றார்.