
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் தடைப்பட்டுள்ளன. சில கால்பந்து தொடர்கள் சமீபத்தில் ரசிகர்கள் இல்லாத மைதானங்களில் நடக்கத் துவங்கி உள்ளது. இந்த நிலையில் கிரிக்கெட் தொடர்களும் மீண்டும் துவங்க உள்ளன.

டெஸ்ட் தொடர்
கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு இந்தியா உடன் டெஸ்ட் தொடரை நடத்த ஆயத்தமாகி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த கிரிக்கெட் தொடரும் நடக்காத நிலையில், கடும் நஷ்டம் ஏற்பட்டதாக அந்த அமைப்பு முன்பு கூறி இருந்தது.

பெரிய அளவில் வருவாய்
இந்தியா உடனான தொடர் நடந்தால் பெரிய அளவில் வருவாய் கிடைக்கும் எனவும் கூறப்பட்டு வந்த நிலையில், உத்தேச கணக்கில் அந்த டெஸ்ட் தொடர் இடம் பெறவில்லை. அதனால், முன்பு கூறப்பட்டு இருந்த வருமானத்தை விட பாதி மட்டுமே கிடைக்கும் என கணக்கு காட்டி உள்ளது.

சம்பளம் குறையும்
3075 கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கும் என கூறி இருந்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா, தற்போது 1511 கோடி மட்டுமே வருமானம் கிடைக்கும் என கூறி உள்ளது. இதனால், கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தில் 423 கோடி ரூபாய் அளவுக்கு குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எதிர்ப்பு
ஆனால், இந்த கணக்கை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அமைப்பு ஒப்புக் கொள்ளவில்லை. இந்தியா உடனான தொடர் நடைபெற்றால் சுமார் 1000 கோடி அளவுக்கு வருமானம் கிடைக்கும் என கூறப்படும் நிலையில் அதையும் கணக்கில் சேர்த்து வீரர்கள் சம்பளத்தில் கை வைக்காமல் இருக்க வேண்டும் என கூறி உள்ளது.


Click it and Unblock the Notifications