இந்தூர்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நம்பர் 8ல் களமிறங்கும் வீரருக்கு பேட்டிங் செய்ய தெரிவதன் அவசியத்தை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் மூலமாக தெரிய வந்துள்ளது.
உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் சூழலில் இந்திய அணியின் நம்பர் 8 வரிசை யாருக்கு என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது. ஏனென்றால் நம்பர் 8 வரிசையில் விளையாடும் வீரருக்கு சிறிதளவுக்காவது பேட்டிங் செய்ய தெரிய வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் காரணமாகவே ஒவ்வொரு முக்கியமான போட்டியிலும் முகமது ஷமிக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்.

ஏனென்றால் இதற்கு முன்பாக இந்திய அணி எப்போது எல்லாம் பேட்டிங்கில் சொதப்பியுள்ளதோ, அப்போதெல்லாம் ஷர்துல் தாக்கூர் இந்திய அணியின் காப்பானாக இருந்துள்ளார். அதேபோல் பும்ரா, ஷமி அல்லது சிராஜ் ஆகியோர் ஒரு பக்கம் இருந்து பிரஷர் கொடுக்கும் போது ஏராளமான பேட்ஸ்மேன்கள் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சை அட்டாக் செய்ய நினைத்து ஆட்டமிழந்து வெளியேறுவார்கள். இருப்பினும் கடந்த சில வாரங்களாக ஷர்துல் தாக்கூர் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் மூலமாக நம்பர் 8 வரிசையில் வரும் வீரரும் பேட்டிங் செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்திய ரசிகர்களுக்கு உணர்த்தியுள்ளது. ஏனென்றால் 128 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி திணறிய போது, அதிரடியாக பவுண்டரியும், சிக்சருமாய் விளாசிய அப்பாட் 29 பந்துகளில் அரைசதம் கடந்துள்ளார்.

இவரின் அதிரடி காரணமாக ஆஸ்திரேலிய அணி 27 ஓவர்களில் 200 ரன்களை கடந்தது. கடைசி வரை போராடிய அப்பாட் ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் ஓரளவிற்கு கவுரவமான தோல்வியை சந்தித்துள்ளது. சிறப்பாக ஆடிய அப்பாட் 36 பந்துகளில் 54 ரன்களை சேர்த்தார். ஒருவேளை இவருடன் டாப் ஆர்டரில் உள்ள வீரர்கள் யாரெனும் விளையாடி இருந்தால், ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு அருகில் கூட வந்திருக்கும்.

இதன் காரணமாகவே நம்பர் 8ல் களமிறங்கும் வீரருக்கு பேட்டிங் செய்ய தெரிந்திருந்தால் வெற்றிக்காக இன்னும் தீவிரமாக போராட முடியும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களாக சிராஜ் மற்றும் பும்ரா இருக்கும் போது 3வது வேகப்பந்துவீச்சாளராக ஷர்துல் தாக்கூர் சரியாக தேர்வாகவே பார்க்கப்படுகிறது.