சிட்னி: பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்க உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில் பாகிஸ்தானில் மோசமான சூழல் இருப்பதாகவும், வெளிநாட்டினரை குறி வைத்து தாக்குதல் மற்றும் கடத்தல் சம்பவங்கள் நடக்கலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது. எனவே, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இது அந்த தொடருக்கு பெரும் நிதி இழப்பையும் ஏற்படுத்தக் கூடும். இதன் பின்னணி என்ன என்று பார்க்கலாம்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய விமானத் தாக்குதலில் 400 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாத முகாம்களை அழிப்பதாகக் கூறிக்கொண்டு மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ள பாகிஸ்தானின் செயலால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

தீவிரவாதிகளின் புகலிடமாகச் செயல்பட்டு வரும் பாகிஸ்தானில் எப்போது குண்டு வெடிக்கும், எப்போது தாக்குதல் நடக்கும் என்று சொல்ல முடியாத அளவுக்குப் பாதுகாப்பு நிலைமை மிக மோசமாக உள்ளது. இந்தச் சூழலில், மார்ச் 26 ஆம் தேதி தொடங்க உள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்க ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்ட 17 ஆஸ்திரேலிய வீரர்களும், பயிற்சியாளர்களும் அங்குப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், ஆஸ்திரேலிய அரசு தனது நாட்டு மக்களுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. "பாகிஸ்தானில் வெளிநாட்டினரைக் குறிவைத்துத் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. குறிப்பாக வெளிநாட்டினரைக் கடத்திச் செல்லும் அபாயம் அங்கு மிக அதிகமாக இருப்பதால், பாகிஸ்தான் பக்கமே செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்தியுள்ளது. இஸ்லாமாபாத், கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் போன்ற முக்கிய நகரங்களில் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
போட்டிகள் நடைபெற உள்ள நகரங்களே பாதுகாப்பற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்பது பெரும் சந்தேகமாகியுள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, அவசரத் தேவைக்குத் தனி விமானம் ஏற்பாடு செய்து தருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் கெஞ்சி வருகிறார்.
ஒருவேளை போர் பதற்றம் அதிகரித்து வான்வழிப் போக்குவரத்து முடக்கப்பட்டால் வீரர்களின் உயிருக்கு யார் உத்தரவாதம் அளிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தத் தொடரைப் புறக்கணித்தால், இந்த ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் பெரும் தோல்வியைச் சந்திக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

முல்தான் சுல்தான்ஸ் - ஸ்டீவ் ஸ்மித், ஜோஷ் பிலிப், பீட்டர் சிடில், ஆஷ்டன் டர்னர், டிம் பெயின் (தலைமைப் பயிற்சியாளர்)
ஹைதராபாத் கிங்ஸ்மென் - மார்னஸ் லாபுஷேன், கிளென் மேக்ஸ்வெல், ரிலே மெரிடித், ஜேசன் கில்லெஸ்பி (தலைமைப் பயிற்சியாளர்)
கராச்சி கிங்ஸ் - டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா
குவெட்டா கிளாடியேட்டர்ஸ் - சாம் ஹார்ப்பர், பென் மெக்டெர்மாட், ஸ்பென்சர் ஜான்சன்
பின்டிஸ் - ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்
பெஷாவர் சல்மி - ஆரோன் ஹார்டி
இஸ்லாமாபாத் யுனைடெட் - மேக்ஸ் பிரையன்ட்
