பர்மிங்ஹாம்: ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழப்பிற்கு 311 ரன்கள் குவித்து களத்தில் இருப்பதால், இங்கிலாந்து அணி சிக்கலில் சிக்கியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் பேஸ்பால் திட்டத்தை விமர்சித்து வருகின்றனர்.
பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து வெளிவர முடியாமல் சிக்கி தோல்வியடைந்து வந்த இங்கிலாந்து அணி, பென் ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் கூட்டணி மூலமாக பேஸ்பால் திட்டத்தை கையில் எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி ஆடிய 13 டெஸ்ட் போட்டிகளில் 11ல் வெற்றிபெற்று பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. வெற்றி, தோல்வியை கடந்து இங்கிலாந்து அணியின் ஆட்டம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது. இதனால் ஆஷஸ் தொடரிலும் பேஸ்பால் திட்டத்தில் மாற்றமில்லை என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அறிவித்தார்.

அதன்படி முதல் நாள் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் இழந்து 393 ரன்கள் குவித்திருந்த நிலையில், திடீரென இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதல் நாளில் விக்கெட்டை இழக்காமல் ஆஸி. அணி தப்பித்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க வீரர் கவாஜா 126 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனால் 3ஆம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி நிச்சயமாக முன்னிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இங்கிலாந்து அணி பின்பற்றி வரும் பேஸ்பால் திட்டம் இருமுனை கத்தி என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். பிளாட் டிராட் பிட்ச்களில் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்யும், எதிரணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினாலே இங்கிலாந்து அணிக்கு பதற்றம் அதிகரித்துவிடும். அதுமட்டுமல்லாமல் ஆண்டர்சன், பிராட் ஆகியோர் பிளாட் பிட்ச்களில் எப்படி செயல்படுவார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. இதனை ஆஸி. அணி எளிதாக கணிக்கு ஆஷஸ் தொடரை தொடங்கியுள்ளது.
இன்றைய நாளின் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இரு செஷன்களை கடந்தாலே, இங்கிலாந்து அணியின் பாடு திண்டாட்டம் தான். இதன்மூலம் இங்கிலாந்து அணி பேஸ்பால் திட்டத்தை வழக்கமான டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடினாலே முறியடிக்க முடியும் என்று ஆஸ்திரேலிய அணி நிரூபித்துள்ளது. சிறந்த பேட்டிங் மற்றும் தரமான பவுலர்களுடன் இங்கிலாந்து மண்ணில் களமிறங்கினாலே, எளிதாக வெற்றிபெற முடியும் என்று பேஸ்பால் திட்டத்தை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.