பெர்த்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே இருக்கிறது. இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.
அதனால், இந்திய அணி கடும் அழுத்தத்தில் இருக்கிறது. மறுபுறம் ஆஸ்திரேலிய அணி வலுவான அணியைப் போல ஒரு பிம்பம் இருக்கிறது. ஆனால், உண்மையில் ஆஸ்திரேலியா அணியிலும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு மட்டுமே தற்போது வலுவாக உள்ளது. ஆனால், பேட்டிங் கவலைக்கிடமாகத்தான் உள்ளது.

டேவிட் வார்னர் இந்த ஆண்டின் துவக்கத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் யாரை துவக்க வீரராக ஆட வைப்பது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. ஸ்டீவ் ஸ்மித் சில போட்டிகளில் துவக்க வீரராக விளையாடினார். ஆனால், அது ஒத்துவரவில்லை. அதனால், அவரது பேட்டிங்கும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நாதன் மெக்ஸ்வீனி என்ற வீரரை துவக்க வீரராக அறிமுகப்படுத்த ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டு உள்ளது. இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. நாதன் மெக்ஸ்வீனி உள்ளூர் போட்டிகளில் மூன்றாம் வரிசையில் தான் விளையாடி வருகிறார். அவர் துவக்க வீரராக விளையாடியது இல்லை.
எனினும், அவரை துவக்க வீரராக ஆட வைக்க ஆஸ்திரேலிய அணி முடிவு செய்துள்ளது. இதற்காகவே அவர் ஆஸ்திரேலியா ஏ அணியில் இடம் பெற்று, இந்தியா ஏ அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சிப் போட்டியில் முதன் முறையாக துவக்க வீரராக விளையாடினார். ஆனால், அதிலும் அவரால் பெரிதாக ரன் குவிக்க முடியவில்லை.
அப்படி இருந்தும் அவரை தவிர வேறு சிறந்த தேர்வு யாரும் இல்லை என்ற முடிவை எடுத்து இருக்கிறது ஆஸ்திரேலிய அணி நிர்வாகம். அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களில் உஸ்மான் கவாஜாவை தவிர மற்றவர்கள் மோசமான ஃபார்மில் உள்ளனர். ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷேன், மிட்செல் மார்ஷ், ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் இந்த ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.
அவர்கள் அனைவருமே ஓரிரு போட்டிகளில் அரைசதம் அடித்து இருந்தாலும், பெரும்பாலும் கூட்டணி அமைத்து ரன் சேர்க்க வேண்டிய நேரத்தில் தங்கள் விக்கெட்களை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்து இருந்தனர். அதனால். அவர்களின் பேட்டிங் சராசரி இந்த ஆண்டு மோசமான நிலையில் உள்ளது. ஆக ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் துவக்கம் முதல் மிடில் ஆர்டர் வரை ஊசலாட்டத்தில் உள்ளது.
இந்திய அணி பந்து வீச்சில் முழு திறமையை வெளிப்படுத்தினால் நிச்சயமாக ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த முடியும். அதே சமயம் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்களால் சமாளிக்க முடியுமா? என்பது இங்கு மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.
மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட், பாட் கம்மின்ஸ் என மூன்று அனுபவ வேகப் பந்துவீச்சாளர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். உலகின் முன்னணி ஸ்பின்னர்களில் ஒருவராக இருக்கும் நாதன் லியோன் ஒரே ஸ்பின்னராக அச்சுறுத்த இருக்கிறார். இந்த நால்வர் கூட்டணியை எதிர்த்து இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது என்பது நிச்சயம் சவாலான ஒன்றாகவே இருக்கும்.