
2008ஆம் ஆண்டு சர்ச்சை
கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் - ஹர்பஜன் சிங் இடையே நடந்த சீண்டல் சம்பவம் பெரிதாக வெடித்தது. ஹர்பஜன் சிங், சைமண்ட்ஸ்-ஐ பார்த்து குரங்கு என திட்டியதாக ஆஸ்திரேலிய வீரர்கள் புகார் கூறினர்.

நீடித்த பரபரப்பு
பின்னர், அந்த சம்பவத்தில் ஹர்பஜன் சிங் திட்டியதற்கு ஆதாரம் இல்லை எனக் கூறி பிரச்சனை முடிக்கப்பட்டது. அதன் பின் சில காலத்துக்கு ஆஸ்திரேலிய அணியுடன், ஹர்பஜன் சிங் ஆடினால் உடனே பரபரப்பு எழும். இந்த நிலையில், ஆஸ்திரேலிய அம்பயர் ஒருவர் 2010இல் ஹர்பஜனை சீண்டி உள்ளார்.

இந்தியா - இலங்கை டெஸ்ட்
ஜூலை 2010இல் இந்தியா - இலங்கை இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முத்தையா முரளிதரன் ஓய்வு பெற்ற பின் இலங்கை அணி ஆடும் முதல் டெஸ்ட் தொடர் அது. இந்திய அணியில் ஹர்பஜன் சிங் இடம் பெற்று இருந்தார்.

அகலத் தொப்பி
அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அம்பயரான டேரில் ஹார்பர் இடம் பெற்று இருந்தார். ஹர்பஜன் சிங் பந்து வீசும் போது தன் வட்டமான அகலத் தொப்பியை டேரில் ஹார்பரிடம் வழங்கினார். டேரில் ஹார்பர் தன் கையில் வாங்க தயங்கினார்.

அழுக்கு தொப்பி
மாறாக ஒரு கர்சீப் வைத்து தன் இடது கையில் அந்த தொப்பியை வாங்கினார். அந்த தொப்பி அழுக்காக, வியர்வையுடன் மோசமாக இருந்ததாக ஹார்பர் அதற்கு காரணம் கூறினார். அது ஹர்பஜன் சிங்கை அப்போது கோபப்படுத்தியது.

துர்நாற்றம் வீசியது
சமீபத்தில் டேரில் ஹார்பர் அது பற்றி கூறுகையில், தான் அந்த துர்நாற்றம் வீசிய தொப்பியை கர்சீப் வைத்து தான் பிடித்துக் கொண்டதாக கூறி உள்ளார். அதன் மூலம் தன்னை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொண்டதாகவும் உலகம் முழுவதும் வைரஸ் பரவும் முன்பே தான் அதை உடல்நலத்தை பாதிக்கும் விஷயமாக கருதியதாக கூறினார்.

கடும் கோபம்
டேரில் ஹார்பரின் இந்த செயலால் கடும் கோபம் அடைந்தார் ஹர்பஜன் சிங். அந்த அம்பயரை கிண்டல் செய்யும் வகையில் ஆஸ்திரேலியாவில் இந்த தொப்பி எங்கே தயார் செய்கிறார்கள், எங்கே மாற்று தொப்பிகளை வாங்குவது என கிண்டலாக கேட்டு இருக்கிறார்.

5 புதிய தொப்பிகள்
அடுத்து இந்தியா அதே ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அந்த போட்டிகளில் பணியாற்றிய மற்றொரு ஆஸ்திரேலிய அம்பயர் ஸ்டீவ் டேவிஸ், ஹர்பஜன் சிங்குக்கு ஐந்து தொப்பிகளை வழங்கி உள்ளார்.

அம்பயர்கள் கிண்டல்
டேரில் ஹார்பர், தன் நண்பரும், சக அம்பயருமான ஸ்டீவ் டேவிஸ் மூலம் அந்த தொப்பிகளை வழங்க ஏற்பாடு செய்தார். ஆக, இரண்டு ஆஸ்திரேலிய அம்பயர்கள் ஹர்பஜன் சிங்கை குறி வைத்து கிண்டல் செய்துள்ளனர் என்றே இதை பார்க்க வேண்டி உள்ளது.

நன்றி சொல்லவில்லை
பின்னர், 2011இல் மீண்டும் ஹர்பஜன் சிங் ஆடிய போட்டியில் டேரில் ஹார்பர் அம்பயராக பணியாற்றினார். அப்போது ஹர்பஜன் சிங் அந்த தொப்பிகளுக்காக தனக்கு நன்றியும் கூறவில்லை, ஏற்கனவே பேசியபடி பணமும் அளிக்கவில்லை என ஹார்பர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











