
கண்கொள்ளா காட்சி
இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பனுகா களமிறங்கினர். இதில், பனுகா 27 ரன்களில் வெளியேறினாலும், அவிஷ்கா மிகச் சிறப்பாக விளையாடினார். தென்னாப்பிரிக்க பவுலர்களை மிக மிக நேர்த்தியாக எதிர்கொண்டார். பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஏனெனில், சமீபத்திய காலங்களில் இப்படியொரு அபார இன்னிங்ஸை, இப்படியொரு சிறந்த பேட்டிங்கை, அதுவும் தென்னாப்பிரிக்கா போன்ற மிகப்பெரிய அணிக்கு எதிராக விளையாடி பார்த்ததில்லை. 115 பந்துகளை சந்தித்த ஃபெர்னாண்டோ, 118 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும்.

இலங்கை வெற்றி
இதன் பிறகு களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் எய்டன் மார்க்ரம் 90 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, வான் டெர் டூசன் 59 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் கணிசமாக ரன்கள் எடுத்தாலும் இலக்கை எட்ட அது போதுமானதாக அமையவில்லை. இதனால், அந்த அணி 50 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் மட்டும் எடுக்க முடிந்தது. இலங்கை 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இலங்கை 1-0 என்று முன்னிலையில் உள்ளது.

இப்போது தென்னாப்பிரிக்கா
கடந்த ஜுலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்த ஷிகர் தவான் தலைமையிலான இந்திய ஏ அணி, ஒருநாள் தொடரை கைப்பற்றினாலும், டி20 தொடரை இழந்தது. அந்த வெற்றி இலங்கைக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது. இந்த நிலையில், இப்போது தென்னாப்பிரிக்காவை முதல் ஒருநாள் போட்டியில் வீழ்த்தியிருப்பது அந்த அணிக்கு மாபெரும் உற்சாகமாக அமைந்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி படுதோல்வி அடைந்தது. அதேபோல், இங்கிலாந்து சென்று விளையாடிய போதும், சர்வநாசமானது. அதைத் தொடர்ந்து தற்போது இந்தியா, தென்னாப்பிரிக்கா என்று அடுத்தடுத்து வெற்றிகளை குறி வைத்து இலங்கை நகர்ந்து வருகிறது.

கிரிக்கெட்டுக்கு நல்லது
இலங்கை அணியின் மோசமான விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் காரணமாக, அந்நாட்டின் ரசிகர்களே இலங்கை கிரிக்கெட் வீரர்களை சமூக தளங்களில் ஃபாலோ செய்வதை நிறுத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்த நிலையில், இலங்கை அணிக்கு இந்த வெற்றிகள் நம்பிக்கையை விதைத்துள்ளது எனலாம். இலங்கை போன்ற ஒரு உலக சாம்பியன் அணி கிரிக்கெட் உலகில் மீண்டும் ஃபார்முக்கு வருவது என்பது அந்த அணிக்கும் நல்லது கிரிக்கெட்டுக்கும் நல்லது.


Click it and Unblock the Notifications