கான்யா: டி20 உலகக் கோப்பை இப்போது இறுதிப் போட்டியை எட்டியுள்ளது.. இன்றிரவு நடக்கும் உலகக் கோப்பை இறுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த பிட்ச் என்ன தான் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாக இருந்தாலும் கூட நமது இரண்டு ஸ்பின்னர்கள் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள்.
உலகக் கோப்பை டி20 தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடக்கிறது. கடந்த 1ம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை தொடர் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

டி20 உலகக் கோப்பை: இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கன் அரையிறுதி போட்டியை எட்டியிருந்தது. அதில் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கன் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.. அடுத்து நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை இந்தியா துவம்சம் செய்தது.
இதையடுத்து இன்று இரவு நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இரண்டு டீம்களுக்கும் முக்கியமானது. ஏனென்றால் கடந்த 2013க்கு பிறகு இந்தியா எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வென்றதே இல்லை. தென் ஆப்பிரிக்கா நிலை அதை விட மோசம். அவர்கள் வரலாற்றில் இதுவரை எந்தவொரு ஐசிசி தொடரையும் வென்றதே இல்லை.
இறுதிப் போட்டி: இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களை விட வேகப்பந்து வீச்சாளர்களுக்கே சாதகமாக இருக்கும் என்றே வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு மேட்ச் அப் இருக்கிறது. அதாவது இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களான அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள்.
குறிப்பாகத் தென் ஆப்பிரிக்க நட்சத்திர பேட்ஸ்மேன்களாக இருக்கும் குயின்டென் டி காக் மற்றும் ஐடன் மார்க்ராம் ஆகியோரை இந்த இரு பவுலர்கள் கடந்த 2022 முதல் டி20 போட்டிகளில் ஏழு முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளனர். இடது கை சுழற்பந்து வீச்சாளர்களிடம் இருவருமே திணறி வந்துள்ளதால் அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இருப்பது இந்தியாவுக்குப் பெரிய பிளஸ். இதில் அக்சர் படேல் இப்போது வேற லெவல் ஃபார்மில் இருக்கிறார். ஜடேஜா தனது சிறப்பான ஃபார்மில் இல்லை என்ற போதிலும் அவர் எப்போதும் எத்திரணிக்கு ஆபத்து தான்.

குல்தீப்: அதேபோல சைனாமேன் ஸ்பின்னரான குல்தீப் யாதவ்வும் இப்போது சிறப்பான பார்மில் இருக்கிறார். அவர் இந்த உலகக் கோப்பை தொடரில் குல்தீப் யாதவ் 10 விக்கெட் வீழ்த்தி கலக்கலான பார்மில் இருப்பதும் நமக்கு பிளஸ். இப்படி நமது மூன்று நட்சத்திர ஸ்பின்னர்களும் தென் ஆப்பிரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இறுதிப் போட்டி: இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையேயான இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா தென் ஆப்பிரிக்கா என இரண்டு டீம்களுக்கும் இறுதிப் போட்டி என்பது அலர்ஜியாகவே இருந்துள்ள நிலையில், அதை எந்த டீம் மாற்றி அமைக்கும் என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.