ராஜ்கோட் : இந்திய அணியில் இடம் பிடிப்பதே கடினம் என்ற நிலையில், கிடைத்த வாய்ப்பையும் அஸ்வின் எடுத்துக் கொண்டதால் சோகத்தில் இருக்கிறார் இளம் வீரர் அக்சர் பட்டேல்.
2௦23 உலகக்கோப்பை தொடருக்கான அணித் தேர்வின் போது சாஹல்-ஐ தாண்டி இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார் அக்சர் பட்டேல். அவர் சுழற்பந்துவீச்சாளர் என்பதோடு பேட்டிங்கிலும் அணிக்கு ரன்கள் சேர்ப்பார் என்பதால் இந்திய அணியில் வாய்ப்பை பெற்றார்.

அதன் பின் ஆசிய கோப்பை தொடரில் ஆடிய அவர் காயத்தால் பாதி தொடரில் வெளியேறினார். அவர் உலகக்கோப்பை தொடருக்கு முன் குணமாகி அணிக்கு திரும்புவாரா? என்பது கேள்விகுறியாகி உள்ளது.
இந்த நிலையில், அவருக்கு மாற்றாக அணியின் அனுபவ வீரர் அஸ்வின் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டார். நீண்ட காலமாக ஒருநாள் போட்டிகளில் அவர் ஆடாத போதும், அவரது அனுபவத்தை கருத்தில் கொண்டு அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
குறிப்பாக உலகக்கோப்பை தொடரில் அவரது அனுபவம் பெரிய அளவில் அணிக்கு உதவும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி இருந்தார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். அதற்கேற்ப ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அஸ்வின் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்துள்ளார்.
இரண்டு போட்டிகளில் அவர் ஓவருக்கு சராசரியாக 5 ரன்கள் என்ற அளவில் ரன்களை கொடுத்து மொத்தம் 4 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். அவர் தனது பந்துவீசும் முறையைக் கூட மாற்றி இருந்தார். அதனால், அவரது பந்துவீச்சை கணித்து ஆடுவது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சிரமமாக இருந்தது.
காயம் குணமானாலும் அவர் உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெறமாட்டார் என பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.