சென்னை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் அக்சர் படேல் காயம் காரணாமாக விலகியுள்ளார்.
உலகக்கோப்பை தொடர் இன்னும் 10 நாட்களில் தொடங்கவுள்ளது. அக்.5ஆம் தேதி தொடங்கவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நவ.19ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்கான அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றனர். ஒரு சில அணிகள் ஏற்கனவே இந்தியா வந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர். இதனால் உலகக்கோப்பை ஃபீவர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்திய அணியை பொறுத்தவரை ஆசியக் கோப்பையை வென்ற கையுடன், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமல்லாமல் காயமடைந்து நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த வீரர்கள் அனைவரும் ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார்கள். இந்திய அணியில் மிடில் ஆர்டர் ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பாக அக்சர் படேல் காயமடைந்தார். அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஃபிட்னஸை எட்டினால் களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால், ரவிச்சந்திரன் அஸ்வின அவரது இடத்தை நிரப்பியுள்ளார்.
அக்சர் படேலுக்கு இடதுகை கையில் ஏற்பட்ட காயத்திற்கு தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிசிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அக்சர் படேலின் காயம் எப்போது முழுமையாக குணமடையும் என்று இந்திய அணி நிர்வாகம் தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை.
ஒருவேளை உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக அக்சர் படேல் குணமடையவில்லை என்றால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் சென்னை சேப்பாக்கம் ஆட்டம் நடக்கவுள்ளதால், அந்த மைதானத்தின் தன்மையை அஸ்வின் அளவிற்கு புரிந்துகொண்ட வீரர்கள் இந்திய அணியில் யாருமில்லை.
செப்.27ஆம் தேதி இந்திய அணி நிர்வாகம் தரப்பில் உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் யார் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். இதனால் சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டியில் அஸ்வின் களமிறங்குவாரா என்பது நாளை மறுநாள் தெரிய வரும்.