எல்லாரையும் ஸ்லிப்-ல நிக்க வைக்க கூடாது.. அது அதுக்குன்னு ஆள் இருக்கு.. அறிவுரை கூறும் அசார்
பெங்களூர் : இந்திய அணி தற்போது நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் உட்பட, சமீப காலமாக ஸ்லிப் கேட்ச்களை அதிகளவில் தவற விட்டு வருகிறது. இது குறித்து, அசாருதீன் பேசியுள்ளார்.
ஸ்லிப் திசையில் நிற்கும் வீரர்களை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும், அவர்கள் எப்படி பயிற்சி செய்ய வேண்டும் உள்ளிட்ட யோசனைகளை கூறி உள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் நடந்து வரும் முதல் டெஸ்டில், ஜென்னிங்க்ஸ் கொடுத்த கேட்ச்சை ஸ்லிப் திசையில் நின்ற ரஹானே தவற விட்டார். இதற்கு முன்பு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியினர் அதிக அளவில் ஸ்லிப் கேட்ச்களை தவற விட்டனர். அதே போல, இங்கிலாந்து அணியும் விராத் கோலியின் ஸ்லிப் கேட்ச்களை தவறவிட்டது.
ஸ்லிப் பீல்டிங் குறித்து கர்நாடகா பிரீமியர் லீக் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற அசாருதீன் கூறினார். “ஸ்லிப் ஒரு சிறப்பான பீல்டிங் யுக்தி. ஆறு மணி நேரத்திற்கு ஸ்லிப்பில் நிற்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. அதற்கு பயிற்சியின் போது, தினமும் 50-60 கேட்ச்கள் பிடித்து பயிற்சி செய்ய வேண்டும். அனைவரும் ஸ்லிப்பில் நின்றுவிட முடியாது. ஆனால், அதுதான் இந்திய அணியில் நடந்து வருகிறது. ஸ்லிப்பில் நிற்க விருப்பமுள்ள வீரர்களை அடையாளம் காண வேண்டும். அதற்கு கடினமான பயிற்சிகள் மேற்கொள்ளவும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும்” என்றார் அசாருதீன்.
டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் செய்ய பல அணிகளும் தற்போது தடுமாறி வருகின்றன. இது குறித்து கூறியபோது, “பந்து திசை மாற்றி வரும் போது பெரும்பாலான அணிகள் தடுமாறுகின்றன. இதற்கு காரணம், குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பேட்டிங் செய்ய சாதகமான பிட்ச்களில் ஆடுவதுதான். நீங்கள் பந்து அதிகம் நகரும் பிட்ச்களில், அதிகம் விளையாட வேண்டும். அதனால் மட்டுமே அதில் முன்னேற முடியும்” என்றார்.
மேலும், விராத் கோலி, புஜாராவை விடுத்தது, ராகுலை அணியில் சேர்த்தது சரியான முடிவுதான் என தெரிவித்துள்ளார். புஜாரா கவுன்டி கிரிக்கெட்டில் ஆடினாலும், அதிக ரன் சேர்க்கவில்லை. அதே போல, அவர் வெளிநாடுகளில் தடுமாறி வருகிறார் என கூறினார்.
அவரது காலத்தில் அசாருதீன் ஒரு அட்டகாசமான பீல்டராக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications