சென்னை : கிரிக்கெட் போட்டி என்றால் அது ஜென்டில்மேன் கேம் என்ற இலக்கணம் எல்லாம் தாண்டி வெகு நாட்களாகி விட்டது. ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கர் 99 ரன்களில் இருக்கும் போது நடுவர் அவுட் கொடுத்தது தவறாக இருந்தாலும் கூட அவர் எதுவும் பேசாமல் பெவிலியன் நோக்கி சென்று விடுவார்.
ஆனால் இப்போது சாதாரண போட்டிகளில் கூட நடுவர்கள் ஏதேனும் தவறாக முடிவு கொடுத்து விட்டால் வீரர்கள் டென்ஷனாகி வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கி விடுகிறார்கள்.

அண்மையில் மகளிர் கிரிக்கெட்டில் கூட இந்திய அணி கேப்டன் ஹார்மன் பிரித் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இரண்டு போட்டிகளில் விளையாட தடை வாங்கி இருக்கிறார். இந்த நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் உள்ளூர் போட்டியில் டிவிஷன் ஒன்றில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜாலி ரோவர்ஸ் மற்றும் யங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில் பாபா அப்ரஜித் 34 ரன்கள் எடுத்திருந்தபோது ஹரி நிஷாந்த் வீசிய வந்து டர்ன் ஆனது. இது அப்ரஜித்தின் பேட் மற்றும் பேடில் பட்டு ஷார்ட் லெகில் இருந்த ஜி. எஸ். ராஜுவிடம் கேட்ச் ஆனது. இதற்கு நடுவர்கள் அவுட் கொடுத்தனர். இதனால் கடுப்பான பாபா அப்ரஜித் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனை எப்படி நீங்கள் அவுட்டு கொடுக்கலாம், அவர் கேட்சை பிடிக்கவில்லை என வாதாடினார். இதனை அடுத்து எதிரணி வீரர்களும் பாபா அப்ரஜித்துடன் வந்து நாங்கள் கேட்சை பிடித்து விட்டோம் என்று கூறினார்கள். இதனால் மேலும் கோபம் அடைந்த பாபா அப்ரஜித் இது கேட்சே கிடையாது. கேட்ச் பிடிப்பதற்கு முன்பே பந்து தரையில் பட்டு விட்டதாக கூறினார்.
இதனை அடுத்து நடுவருடன் மீண்டும் அவர் மோதலில் ஈடுபட சக அணி வீரர் பாபா அப்ரஜித்தை சமாதானப்படுத்தி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்கள். இதன் மூலம் ஆட்டம் ஐந்து நிமிடம் வரை தடைப்பட்டது. நடுவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதால் பாபா அப்ரஜித் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.