டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு பாபா' வீரேந்திர சேவாக்ஜி வாழ்த்து கூறியுள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது.

நான்காம் நாளான இன்று மேலும் 84 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா உள்ளது. டெஸ்ட் தொடரை வெற்றியுடன் இந்தியா துவக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
பலரும் முன்னதாகவே வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் வித்தியாசமான முறையில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டில் எப்படி அவர் அதிரடி ஆட்டக்காரரோ அப்படியே, சமூகதளத்தில் அதிரடி கமெண்ட்களை அடித்து வருகிறார் சேவாக். இன்ஸ்டாகிராமில் இந்திய அணிக்கு அவர் வாழ்த்து கூறியுள்ளார். அதில் சாமியார் போல் உடை, ருத்திராட்ச மாலைகள் அணிந்துள்ளார் சேவாக்.
அதில் எண்ணம்போல் நடக்கும். இந்திய அணிக்கு எப்போதும் எமது ஆசிகள் உண்டு' என்று ஆசிர்வதித்து போஸ் கொடுத்துள்ளார் சேவாக்.
அவருடைய எண்ணம்தான் நம்முடைய எண்ணமும். இந்தியா வெற்றி பெற வாழ்த்துவோம்.