கராச்சி: பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடியின் திருமணத்தில் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் பங்கேற்றது ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சூப்பர் 4 தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி சிறப்பாக தொடங்கியது பாகிஸ்தான் அணி. ஆனால் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுடன் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்ததோடு, சூப்பர் 4 சுற்றில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் 2 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. அதற்கு கேப்டன் பாபர் அசாமின் மோசமான கேப்டன்சியே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி வீரர்கள் ஓய்வறையில் மோதிக் கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஓய்வறையில் கேப்டன் பாபர் அசாம் பேசுகையில், இங்கு யாரும் சூப்பர்ஸ்டார் வீரர்கள் கிடையாது. அனைவரும் பொறுப்பை உணர்ந்து விளையாடுங்கள் என்று பேசிக் கொண்டிருந்த போது, ஷாகின் அப்ரிடி குறுக்கிட்டார். ஷாகின் அப்ரிடி தரப்பில், யார் சிறப்பாக விளையாடினார்கள் என்று கூறலாமே என்று சொல்ல, அதற்கு பாபர் அசாம், யார் சிறப்பாக விளையாடினார்கள் என்று எனக்கு தெரியும் என்று ஆவேசமாக கூறினார்.
தொடர்ந்து ஷாகின் அப்ரிடி, ஆசியக் கோப்பை தொடரில் கேப்டனாக என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பாபர் அசாம், நேபாள அணியுடன் சதம் விளாசினேன் என்று பதில் அளித்தார். இதையடுத்து ஷாகின் அப்ரிடி, நக்கலாக சிரிக்க இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதன்பின்னர் பாகிஸ்தான் துணை கேப்டன் முகமது ரிஸ்வான் இருவரையும் சமாதானம் செய்தார்.
இந்த நிலையில் ஷாகின் அப்ரிடிக்கும், முன்னாள் கேப்டனான ஷாகித் அப்ரிடி மகனாள அன்ஷாவுக்கும் திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே இருவருக்கும் திருமணம் நடைபெற்றிருந்தாலும், அது குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்ற திருமணமாக அமைந்தது. இதனால் உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் ஆகியோர் பங்குபெறும் வகையில் மீண்டும் திருமணம் நடத்தப்பட்டது.
இந்த திருமண விழாவில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமும் பங்கேற்றார். திருமண விழாவில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. சண்டையை மறந்து இருவரும் கட்டியணைத்து பேசியதால், உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.