மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் உலக சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். லாகூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் முன் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். நடுவரிசையில் டிவால்ட் பிரவீஸ் 16 பந்துகளில் 25 ரன்களும், டோனோவன் ஃபெராரியா 15 ரன்களும் எடுக்க தென்னாப்பிரிக்கா அணி 19.2 ஓவரில் 110 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் ஃபகீம் அஷ்ரப் நான்கு விக்கெட்டுகளும், சல்மான் மிர்சா மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதை அடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் ஃபர்கான் 28 ரன்கள் எடுக்க சைம் அயூப் 38 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார்.
இதில் ஆறு பவுண்டரிகள், 5 சிக்சர்கள் அடங்கும். இதுபோன்று பாபர் அசாம் 18 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு பவுண்டரி அடங்கும். இதன் மூலம் 13.1 ஓவரில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் சர்வதேச t20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்திருக்கிறார்.
இதற்கு முன்பு ரோகித் சர்மா 151 இன்னிங்ஸில் 4231 ரன்கள் அடித்த நிலையில் பாபர் அசாம் 123 இன்னிங்ஸ்லே இந்த இலக்கை எட்டி விட்டார். தற்போது மூன்றாவது இடத்தில் விராட் கோலி 117 இன்னிங்ஸில் 418 ரன்கள் அடித்திருக்கிறார். ரோகித் சர்மாவின் சராசரி 32 என்ற அளவில் உள்ள நிலையில், பாபர் அசாமின் சராசரி 39 என்ற அளவில் உள்ளது.
ஆனால் விராட் கோலியின் சராசரி 48 என்ற அளவில் இருக்கின்றது. எனினும் இந்த டாப் 3 வீரர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரராக ரோஹித் சர்மா விளங்குகிறார். அண்மையில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் பாபர் அசாம் நீக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் அணிக்கு திரும்பியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.