லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம், டி20 சர்வதேசப் போட்டிகளில் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். நீண்டகாலமாக விராட் கோலி வசம் இருந்த அதிக அரைசதங்கள் அடித்த சாதனையைக் கடந்து, அவர் முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தினார். இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் பாபர் அசாம் 36 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் குவித்து, தனது 39வது அரைசதத்தை பதிவு செய்தார். இது டி20 சர்வதேசப் போட்டிகளில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச அரைசதமாகும். முன்னதாக, விராட் கோலி 38 அரைசதங்களுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இதன்மூலம், டி20 சர்வதேச போட்டிகளில் 39 அரைசதங்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றுள்ளார்.

இந்தச் சாதனையை எட்ட பாபர் அசாம் 139 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டார். இதேவேளை, விராட் கோலி தனது 38 அரைசதங்களை 125 இன்னிங்ஸ்களில் எட்டியிருந்தார். இந்தப் பட்டியலில் அடுத்த இடங்களில் ரோஹித் ஷர்மா (37 அரைசதங்கள்), முகமது ரிஸ்வான் (31 அரைசதங்கள்) மற்றும் டேவிட் வார்னர் (29 அரைசதங்கள்) ஆகியோர் உள்ளனர்.
விராட் கோலி, ரோஹித் ஷர்மா, டேவிட் வார்னர் ஆகியோர் டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். முகமது ரிஸ்வான் தற்போது அணியில் இடம்பெறாத நிலையில், பாபர் அசாம் தனது அரைசத சாதனையை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
3வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபக்கர் ஜமான் 10 ரன்களிலும், கேப்டன் சல்மான் ஆகா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால், சயீம் அய்யூப் மற்றும் பாபர் அசாம் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 69 ரன்கள் குவித்து, அணியை பலப்படுத்தினர்.
சயீம் அய்யூப் 37 பந்துகளில் அதிரடியாக 56 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்தார். பாபர் அசாம் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்து, இன்னிங்ஸை வலுவாக வழிநடத்தினார். பின்னர், ஷதாப் கான் வெறும் 19 பந்துகளில் 46 ரன்கள் விளாசி அதிரடி காட்ட, பாகிஸ்தான் அணி இறுதி ஐந்து ஓவர்களில் 70 ரன்களைக் குவித்து, ஆறு விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தானின் பெரிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் சேஸிங் உடனடியாகத் தடுமாறியது. துவக்க ஓவர்களிலேயே கேப்டன் மிட்செல் மார்ஷ் ஒரு ரன்னில் ஷஹீன் ஷா அப்ரிடியால் கிளீன் போல்டானார். இது ஆஸ்திரேலிய அணியின் சரிவுக்கு வித்திட்டது.
சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ், மேத்யூ ஷார்ட்டை அவுட்டாக்கி, பின்னர் கேமரூன் கிரீன் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரையும் வீழ்த்தினார். ஷஹீன் ஷா அப்ரிடி மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த, ஆஸ்திரேலியா 63 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஜோஷ் பிலிப் மற்றும் கூப்பர் கானோலி ஆகியோரையும் வீழ்த்திய முகமது நவாஸ், தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 18 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரது அபாரமான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 111 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
எனினும், இந்த மூன்றாவது டி20 போட்டியில் பாபர் அசாமின் ஆட்டம் அவரது மிகப்பெரிய பலவீனத்தையும் வெளிப்படுத்தியது. ஐந்துக்கும் மேற்பட்ட பந்துகளை எதிர்கொண்ட வீரர்களில், அவர் அணியில் மிகக் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டைப் பதிவு செய்தார். அதிரடியாக ரன் குவிக்க வேண்டிய போட்டிகளில் பெரிய ஷாட்களை அடிக்க முடியாமல் அவர் திணறினார். இந்தச் சிக்கல் சமீபத்திய பிக் பேஷ் லீக் தொடரிலும் அவருக்கு பெரும் கவலையாக இருந்தது.
விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் ஸ்ட்ரைக் ரேட் சிறந்ததாக இல்லாவிட்டாலும், சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் திறன் அவர்களிடம் இருந்தது. 2026ல் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பிளாட் டிராக்குகள் அமைந்தால், பாபர் அசாம் இந்தத் திறமையைத் தன்னிடம் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். பாகிஸ்தானின் வலுவான பந்துவீச்சால் மட்டும் ஒவ்வொரு போட்டியையும் தொடர்ச்சியாக வெல்ல முடியாது என்பதே இதற்குக் காரணம்.