வேர்ல்டு கப் சமயத்தில் இதெல்லாம் தேவையா? ஆடி காரோடு மடக்கிய போலீஸ்.. வசமாக சிக்கிய பாக். கேப்டன்
லாகூர் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனும், உலகின் நம்பர் 1 ஒருநாள் போட்டி பேட்ஸ்மேனும் ஆன பாபர் அசாம் போக்குவரத்து விதிகளை மீறி காவல்துறையினரிடம் சிக்கி இருக்கிறார்.
2023 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா கிளம்ப இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் அவர் பாகிஸ்தானில் ஆடி (Audi) காரில் அதிக வேகத்தில் சென்று சிக்கி இருக்கிறார்.

அணியில் விரிசல் : முன்னதாக பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியிடமும், இலங்கை அணியிடமும் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. அதனால் அந்த அணியில் விரிசல் எழுந்ததாக பல்வேறு செய்திகள் வெளியானது.
அதெல்லாம் இல்லை : குறிப்பாக கேப்டன் பாபர் அசாம் மற்றும் முக்கிய வீரர்கள் ஷஹீன் ஷா அப்ரிடி, முகமது ரிஸ்வான் இடையே வாக்குவாதம் நடந்ததாக தகவல் வெளியானது. அடுத்ததாக 2௦23 உலகக்கோப்பை தொடருக்கு அந்த அணி தயாராக வேண்டும் என்பதால் ஷஹீன் ஷா அப்ரிடியின் திருமணத்துக்கு சென்ற பாபர் அசாம் தங்களுக்குள் எந்த விரிசலும் இல்லை எனக் கூறும் வகையில் அவருடன் சிரித்து பேசிக் கொண்டு இருந்தார்.
அதிக வேகம் : அடுத்ததாக உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வரும் முன் அவர் லாகூரில் ஆடி காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அவர் அதிக வேகத்தில் சென்றதாகவும், விதியை மீறி எதிர் திசையில் சென்றதாகவும் கூறப்படுகிறது.
லைசென்ஸ் இல்லையா? : அப்போது அங்கு இருந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் அவர் காரை மடக்கி நிறுத்தி உள்ளார். பாபர் அசாம் காரை விட்டு இறங்கியதும் டிரைவிங் லைசென்ஸ் கேட்டு இருக்கிறார். ஆனால், பாபர் அசாம் இடம் லைசென்ஸ் இல்லை. இதை அறிந்த அதிகாரி அவருக்கு அபராதம் விதித்து இருக்கிறார்.
இதெல்லாம் தேவையா? : இந்திய மதிப்பில் ரூ.570 அபராதம் விதிக்கப்பட்டது. அந்த பணத்தை கட்டிய பின் அவர் தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டார். எனினும், அவர் அபராதம் கட்டும் போது சிலர் புகைப்படம் எடுத்து அதை பகிர்ந்து விட்டனர். 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் நடக்க இருக்கும் நிலையில், இப்படி காரை தானே வேகமாக ஓட்டிச் செல்ல வேண்டுமா? என பாகிஸ்தான் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications