லாகூர் : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா புறப்படுவதற்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
விசா கிடைக்குமா இல்லையா என்ற பிரச்சனை தீர்ந்த நிலையில் தற்போது பாபர் அசாம் தலைமையான பாகிஸ்தான் அணி இன்று துபாய் புறப்பட்டு செல்கிறார்கள். மீண்டும் நாளை அங்கிருந்து இந்தியா வந்து அடைகிறார்கள்.

இதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் பாபர் அசாம், எங்களுடைய அணியில் பல வீரர்கள் இந்தியாவில் இதற்கு முன் விளையாடியது இல்லை. இன்னும் இது குறித்து நாங்கள் எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இந்தியாவில் ஆடுகளம் எப்படி இருக்கும், நாங்கள் எவ்வாறு விளையாட வேண்டும் என்பது குறித்து முன்கூட்டியே தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறோம்.
மற்ற ஆசிய நாடுகளில் எவ்வாறு ஆடுகளம் இருக்குமோ அதே போல் தான் இந்தியா ஆடுகளமும் இருக்கும். கடந்த உலகக் கோப்பையில் சாதாரண வீரராக இருந்தேன். இந்த உலகக் கோப்பையில் கேப்டனாக பதவி ஏற்று அணியை வழிநடத்தி செல்கின்றேன்.இம்முறை பாகிஸ்தானுக்கு உலக கோப்பையுடன் திரும்பும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவுடன் விளையாடும் போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
அகமதாபாத் ஆடுகளும் உலகின் மிகப்பெரியது என்பதால் மக்கள் நிறைந்த அந்த மைதானத்தில் முன்பு விளையாட ஆவலுடன் இருக்கின்றேன். இந்தத் தொடரில் என்னுடைய முழு திறனையும் வெளிப்படுத்தி விளையாடுவேன். என்னுடைய தனிப்பட்ட சாதனைகளோ ரன்களோ குறித்து நான் கவலைப்பட்டது கிடையாது.
என்னுடைய செயல்பாட்டால் அணி வெற்றி பெற வேண்டும். இந்த உலகக் கோப்பையில் எனக்கென்று சில குறிக்கோள்களை நான் தயார்படுத்தி வைத்திருக்கிறேன். ஆடுகளத்துக்கு சென்றவுடன் 100% என் திறனை வெளிப்படுத்துவேன். உலகக்கோப்பையில் விளையாடுவதன் மூலம் நாம் ஹீரோவாக ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. உலகக் கோப்பையின் போது அனைத்து வீரர்களும் சிறந்த செயல்பாட்டை தான் வெளிக்காட்டுவார்கள்.
எங்கள் அணியில் சில குறைகள் இருக்கிறது. ஆசிய கோப்பையில் பில்டிங்கில் நாங்கள் சரியாக செயல்படவில்லை. முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகள் எடுக்கவில்லை. ஆனால் அதுபோன்ற தவறுகளை மீண்டும் செய்யாதபடி நாங்கள் திட்டங்களை மாற்றி அமைத்திருக்கிறோம். நீங்கள் எவ்வளவு விளையாடுகிறார்களோ அவ்வளவு உங்களால் கற்றுக் கொள்ள முடியும்.
எங்கள் அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் மீது நிறைய விமர்சனங்கள் இருக்கிறது. ஆனால் அவர்கள் சாதாரண வீரர்கள் கிடையாது. அவர்களுடைய திறமையின் காரணமாகவே தற்போது அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள். இம்முறை உலகக் கோப்பை வெல்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என பாபர் அசாம் கூறியுள்ளார்.