மும்பை: டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், முன்னாள் கேப்டன் பாபர் அசாமின் மோசமான ஆட்டம் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. அணிக்குத் தேவைப்பட்ட நேரத்தில் அவர் சோபிக்கத் தவறியது கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
176 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான், முதல் இரண்டு ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து 13/3 என்ற நிலையில் தடுமாறியது. பாபர் அசாமும், உஸ்மான் கானும் ஸ்கோரை 34/4 ஆக உயர்த்தியபோது, ஆக்ஸர் பட்டேலின் பந்தில் ஒரு சிக்ஸர் அடிக்க முயன்ற பாபர் அசாம் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். வெறும் 5 ரன்கள் மட்டுமே சேர்த்த அவர், அணிக்கு நெருக்கடி அளித்த நிலையில் களத்தை விட்டு வெளியேறினார்.

பாபர் அசாமின் இந்த ஆட்டடததை குறை சொன்ன ரசிகர்கள், விராட் கோலி எவ்வாறு 2022 ஆம் ஆண்டு மெல்போர்னில் நடந்த இந்தியா , பாகிஸ்தான் போட்டியில் விளையாடினார் என்று ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். 160 ரன்கள் இலக்கை துரத்தியபோது, 31/4 என்ற நிலையில் இருந்து இந்திய அணியை, கடைசி பந்தில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச் சென்ற கோலி, 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் குவித்தார்.
பாபர் அசாம் பெரும்பாலும் விராட் கோலியுடன் ஒப்பிடப்படுவதுண்டு. ஆனால், இது நியாயமற்றது என்று முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். "நீண்ட காலமாகவே ஒரு ஒப்பீடு நடக்கிறது, அதை நான் நியாயமற்றதாகவே காண்கிறேன். விராட் கோலி மற்றும் பாபர் அசாம். அந்த அளவுக்கு ஒரு மோசமான ஷாட்டை கோலி ஆட்டத்தின் ஆரம்பத்தில் அடித்திருப்பார் என்று என்னால் கற்பனை செய்ய முடியவில்லை," என்று கார்த்திக்தெரிவித்தார்.
"அது ஒரு சரண்டர் ஆவதற்கு சமம். வெற்றி பெறுவதற்கு என்ன தேவை அல்லது அணியை வெற்றிக்கு எப்படி கொண்டு செல்வது என்ற நம்பிக்கை அவரிடம் இல்லை. பாபர் அசாமின் அந்த மோசமான சிக்ஸர் அடிக்கும் முயற்சி, ரன் ரேட்டைப் பின்தொடர அவர் விரும்பினார் என்பதைக் காட்டுகிறது. இது பொதுவாக அவர் ஆடும் முறை அல்ல," என்றும் கார்த்திக் விளக்கினார்.
இந்தியாவின் இளம் பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மாவை தற்போது உலகின் தலைசிறந்த டி20 வீரர் என்று தினேஷ் கார்த்திக் புகழ்ந்துள்ளார். "அழுத்தத்தை சமாளிப்பதுதான் ஒரு வீரரின் உண்மையான பலம். சில ஷாட்களை விளையாடினால் மட்டும் போதாது. பாபர் அசும்மிடம் அந்த உறுதி, நம்பிக்கை இல்லை. உலகின் சிறந்த வீரராக அவர் இருப்பதற்கு அருகிலும் இல்லை. அபிஷேக் ஷர்மாதான் தற்போது உலகின் சிறந்த வீரர்," என்று கார்த்திக் வெளிப்படையாகத் தெரிவித்தார்.