தோனியாக மாறிய பாபர் அசாம்.. அப்படியே அதே தங்கமான மனசு.. பாக். தொடரில் நெகிழ்ச்சி சம்பவம் - வீடியோ
லாகூர்: முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் செய்த சம்பவம் தோனியை நினைவுக்கூர்ந்துள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய 3 அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக தயாராகும் வகையில் நடைபெற்ற இந்த தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பை வென்று அசத்தியது.

பாக். வெற்றி
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 163/7 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய பாகிஸ்தான் அனி 19.3 ஓவர்களில் 168/5 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய முகமது நவாஸ் 22 பந்துகளில் 38 ரன்களை குவித்தார்.

பாபரின் செயல்
இந்நிலையில் வெற்றி பெற்றதும் பாபர் அசாம் செய்த விஷயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேப்டனாக சென்று கோப்பையை பெற்றுக்கொண்ட பாபர் அசாம், உடனடியாக அதனை சக வீரர்களிடம் கொடுத்துவிட்டு, போட்டோ ஃப்ரேமை விட்டு கூட வெளியேறினார். பின்னர் மீண்டும் வந்து கடைசி வரிசையில் நின்று வீரர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். இப்படி ஒரு பெர்ந்தன்மையா? என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தோனியின் செயல்
ஆனால் இது அப்படியே தோனியின் பெருந்தன்மையாகும். எப்படிபட்ட தொடர்களில் வெற்றி பெற்றாலும் தோனி புகைப்படத்திற்காக முன் வரமாட்டார். அவர் கோப்பையை கொடுத்துவிட்டு, ஒரு ஓரமாக அல்லது கடைசி வரிசையில் போய் நின்றுக்கொள்வார். அவரின் இந்த பண்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். இதனை பாபர் அசாமும் பின்பற்றியது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தியாவுக்கு சிக்கல்
டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக ஒரு முக்கிய தொடரை வென்றுள்ள பாகிஸ்தான் அசுர பலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு வரவுள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை தான் எதிர்கொள்கிறது. இந்த போட்டி வரும் அக்டோபர் 23ம் தேதியன்று நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications