நல்லா ஆடிய பவுலரை டீமில் சேர்க்காத பாகிஸ்தான்.. நம்பவே முடியாத காரணத்தைச் சொன்ன கேப்டன் பாபர் அசாம்
போர்ட் ஆஃப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸை பாகிஸ்தான் அணி நீக்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய முகமது அப்பாஸ் நீக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதல் நாள் ஆட்ட முடிவில் இது குறித்துப் பேசிய கேப்டன் பாபர் அசாம் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, தற்போது 1-0 எனப் பின்தங்கியுள்ளது. இந்நிலையில், போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்டில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது.

இந்தப் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் முகமது அப்பாஸ் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக 20 வயதான இளம் வீரர் உபெய்ட் ஷா அறிமுகம் செய்யப்பட்டார். முகமது அப்பாஸ் நீக்கப்பட்டது குறித்துப் பேசிய கேப்டன் பாபர் அசாம், "அப்பாஸுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப கூடுதல் சுழற்பந்து வீச்சாளர் தேவைப்பட்டதால் தான் இந்த முடிவை எடுத்தோம்" என்று கூறினார்.
ஆனால், பாபர் அசாம் கூறிய இந்தக் காரணம் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. ஏனெனில், முதல் டெஸ்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியவர் அப்பாஸ். இரண்டாவது இன்னிங்ஸில் 22 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார். மேலும், வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்தான் அதிக விக்கெட் எடுத்தவராக இருந்தார்.
2024 டிசம்பரில் மீண்டும் அணிக்குத் திரும்பியதில் இருந்து 5 டெஸ்ட் போட்டிகளில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல ஃபார்மில் உள்ளார். மெதுவான ஆடுகளங்களைக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகம் போன்ற இடங்களிலேயே 6 டெஸ்டில் 27 விக்கெட்டுகளை வீழ்த்திய அனுபவம் கொண்ட அப்பாஸை, ஆடுகளத் தன்மையைக் காரணம் காட்டி நீக்கியது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தப் போட்டியில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளரான உபெய்ட் ஷா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மற்றொரு அறிமுக வீரராக அவாய்ஸ் ஜாபர் களம் இறங்கியுள்ளார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
ஜஸ்டின் கிரீவ்ஸ் 64 ரன்களுடனும், ரோஸ்டன் சேஸ் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சிறப்பாகப் பந்துவீசி வந்த முதன்மை பந்துவீச்சாளரைத் தேவையில்லாமல் நீக்கியது பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் ஒரு சரிவைத் தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications

