லாகூர்: இலங்கை அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி தொடரை முழுமையாக வென்று அசத்தியது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக பாபர் அசாம் ஃபார்ம்க்கு திரும்பினார். குறிப்பாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் 83 இன்னிங்ஸ்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்து அசத்தினார்.
பாபர் அசாம் திரும்பி ஃபார்ம்க்கு வந்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. அப்போது பாபர் அசாம் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, நன்றாக விளையாடி வந்தார்.

எதிர்பாராத விதமாக ஜாஃபிரி வெண்டர்சே வீசிய ஓவரில் பாபர் அசாம் 34 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். வெறும் 212 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தான் அணி எளிதாக எட்டிய நிலையில், பாபர் அசாம் தாம் தேவையில்லாமல் ஆட்டம் இழந்து விட்டோமே என்ற விரக்தியில் தனது பேட்டால் கோபத்தில் ஸ்டெம்பை அடித்தார்.
இது ஐசிசி விதிகளுக்கு மீறிய செயல் ஆகும். இதே நேரத்தில் நடுவர் அலெக்ஸ் மற்றும் ரசீத் ஆகியோர் நடத்திய விசாரணையில் பாபர் அசாம் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 10% அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பாபர் அசாம்க்கு ஒரு டீமெரீட் புள்ளிகளும் வழங்கப்பட்டு இருக்கிறது.
கடந்த 24 மாதங்களில் இதுதான் முதல்முறையாக பாபர் அசாம் ஐசிசி இடம் டிமெரீட் புள்ளிகள் வாங்கி இருக்கிறார். இதனால் அவருக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்றாலும் அபராதம் செலுத்த வேண்டும். இந்த தொடரில் பாபர் அசாம் மொத்தமாக மூன்று இன்னிங்சில் விளையாடி 165 ரன்கள் அடித்திருந்தார். இதில் அவருடைய சராசரி 82 என்ற அளவில் இருக்கிறது. தற்போது இலங்கை, ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்புத் தொடர் நடைபெற உள்ளது இதிலும் பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரராக பாபர் அசாம் இடம் பெற்றுள்ளார்.