லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாமின் டி20 ஆட்டம் குறித்து கடந்த சில மாதங்களாகவே கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. நவீன டி20 கிரிக்கெட்டின் வேகத்திற்கு ஈடுகொடுத்து விளையாட அவர் தவறிவிட்டதாகப் பல முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரிலும் பாபர் அசாம் ரன் குவிக்கத் திணறி வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் அவரை விமர்சித்துப் பேசியுள்ளார்.
தனியார் விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சோயப் அக்தர், "முதலாவதாக, டி20 கிரிக்கெட் வடிவம் தனக்கு ஏற்றதல்ல என்று பாபர் அசாம் முடிவெடுத்திருக்க வேண்டும். இரண்டாவதாக, அவரை அணியில் விளையாட வைக்க வேண்டும் என்று நிர்வாகம் விரும்பினால், முதல் ஆறு ஓவர்களில் அவர் பேட்டிங் செய்வதை உறுதி செய்திருக்க வேண்டும். இதில் யாருக்கும் எந்த குழப்பமும் தேவையில்லை, இது மிகவும் எளிமையான விஷயம்" என்று தெரிவித்துள்ளார்.

2026 டி20 உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி வெறும் 66 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 22 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 115.78 ஆகவும் உள்ளது. பெரும்பாலான போட்டிகளில் அவர் மிகவும் தாமதமாகவே ரன் சேர்க்கத் தொடங்குவது மறுமுனையில் உள்ள பேட்ஸ்மேன்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
நெதர்லாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் மோசமான ஷாட்களை ஆடி தனது விக்கெட்டைப் பறிகொடுத்தது எதிரணிக்குச் சாதகமாக அமைந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஷ் லீக் தொடரின் போது, பேட்டிங் பவர் பிளேயைப் பயன்படுத்திக் கொள்வதற்காக ஸ்டீவ் ஸ்மித் இவருக்கு ஒரு ரன் ஓட மறுத்த நிகழ்வும் பேசுபொருளானது.
இந்த உலகக்கோப்பையில் பாபர் அசாம் பெரும்பாலும் நான்காம் வரிசையிலேயே பேட்டிங் செய்து வருகிறார். தொடக்க ஓவர்களில் அவரது ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதாலேயே அவர் நான்காம் வரிசையில் களமிறக்கப்படுவதாகப் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் விளக்கமளித்திருந்தார்.
ஆனால், பயிற்சியாளரின் இந்த விளக்கத்தை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் ஏற்கவில்லை. சோயப் அக்தர் பங்கேற்ற அதே நிகழ்ச்சியில் பேசிய ஹபீஸ், "பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறியதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. முதல் ஆறு ஓவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் பேட்ஸ்மேனும் அவர் கிடையாது, 10 ஓவர்களுக்குப் பிறகு பெரிய ஷாட்களை அடித்து ஆடும் பேட்ஸ்மேனும் அவர் கிடையாது என்று பயிற்சியாளர் கூறுகிறார். இதை நான் பலமுறை கேட்டும் எனக்குப் புரியவில்லை. நிலைமை இப்படி இருந்தால், பாபர் அசாம் ஏன் அணியில் விளையாட வேண்டும்?" என்று வெளிப்படையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே, கொழும்பில் சனிக்கிழமை நடைபெறவிருந்த பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.