மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலே வெளியேறி இருப்பது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணி மீது கடும் விமர்சனங்களை பல முன்னாள் வீரர்கள் வைத்து வருகின்றனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டை சீரழித்து விட்டார்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரர் அகமது சேஷாத் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "பாபர் அசாமின் நிலையை தற்போது பார்த்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவரது பேட்டிங் கேரியர் தொடக்கத்தில் பாகிஸ்தான் அணிக்காக பல்வேறு புதிய சாதனைகளை அவர் படைப்பார் என அனைவரும் எதிர்பார்த்தார்கள்."

"ஆனால் தற்போது என்ன நடக்கிறது என்று அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். ஒரு வீரன் இவ்வளவு காலம் தடுமாற மாட்டார். ஒரு அணியின் சிறப்பாக விளையாடும் வீரரை கேப்டனாக பொறுப்பேற்க வைப்பது மிகப்பெரிய தவறு. பாபர் அசாம் கேப்டனாக மாறியவுடன் அவர் தனது நண்பர்களையே தன்னை சுற்றி வைத்துக் கொண்டார்."
"அணியில் திறமையான வீரர்களுக்கு மதிப்பளிக்காமல் அவர்களுடைய நண்பர்களையே தேர்ந்தெடுத்தார். அணியில் இருக்க தகுதியுடைய வீரர்களை நீக்கிவிட்டு உங்கள் நண்பர்களையே வைத்தால், ஒட்டுமொத்த கிரிக்கெட்டுமே பாதித்துவிடும். இதன் மூலம் நன்றாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் எப்போதுமே அரசியல் தலையீடு நிச்சயம் இருக்கும்."
"அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால் தற்போது இருக்கும் அணியின் நிலைமை ஒரே மாதிரி தான் இருக்கின்றது. நீங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். நன்றாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு தரவில்லை என்றால் எப்படி உங்களால் வெற்றி பெற முடியும்.பாகிஸ்தான் அணியில் ஒழுங்கீனம் தலை தூக்கி இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த வேண்டும். அதை சரி செய்தாலே வெற்றி நிச்சயம் கிடைக்கும்" என்று அகமது சேஷாத் கூறியுள்ளார்.