கொழும்பு: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் டக் அவுட்டாகியுள்ளதை இந்திய ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
அண்மையில் இந்திய அணியின் நட்சத்திர விராட் கோலி பேசுகையில், சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து ஃபார்மெட்களுக்குமான சிறந்த வீரர் பாபர் அசாம் என்று கூறினார். இதனால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் கிங் பாபர் என்று சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்தனர். இதனை அதிருப்தியடைந்த இந்திய ரசிகர்கள், எப்போதும் விராட் கோலியே கிங் என்று பதிலடி கொடுத்தனர்.

இதனால் மீண்டும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலியா அல்லது பாபர் அசாமா என்ற விவாதம் ரசிகர்களிடையே தொடங்கியது. இந்த நிலையில் ஆசியக் கோப்பைத் தொடருக்கு முன் இலங்கையில் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடங்ரில் பங்கேற்றுள்ளன.
இதன் முதல் ஒருநாள் போட்டி தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். அப்போது தொடக்க வீரர் ஃபக்கர் சமான் 2 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கேப்டன் பாபர் அசாம் 3 பந்துகளில் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். முஜீப் உர் ரஹ்மான் வீசிய பந்தில் டபிடபிள்யூ முறையில் பாபர் அசாம் ஆட்டமிழந்தார்.
இதனால் பாகிஸ்தான் அணி 7 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதுமட்டுமல்லாமல் பாபர் அசாம் 16வது முறையாக டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பாபர் அசாமை கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். ஆசியக் கோப்பைத் தொடர் நெருங்கி வரும் சூழலில், இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண விவாதத்திற்கே இப்படியென்றால் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போது பரபரப்பு உச்சத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆசியக் கோப்பை போட்டி செப்.2ஆம் தேதி நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.