லாகூர்: 2026 டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தானின் 15 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் சல்மான் அலி ஆகா கேப்டனாகவும், முன்னாள் கேப்டன் பாபர் அசாம் வீரராகவும் இடம்பிடித்துள்ளார். பாகிஸ்தானின் அனைத்து போட்டிகளும் இலங்கையிலேயே நடைபெறும்
இந்த சூழலில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற BBL தொடரில் சறுக்கிய பாபர் அசாம், டி20 உலககோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டது பெரும்விவாதமானது. உலகக் கோப்பைக்கு முன் தன்னம்பிக்கையை மீட்டெடுக்க அவர் பாகிஸ்தானில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபடுகிறார். முகமது ரிஸ்வான், ஹாரிஸ் ரவுஃப் போன்ற முக்கிய வீரர்கள் இம்முறை அணிக்குத் தேர்வு செய்யப்படாதது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பாபர் அசாம், ஷாஹீன் ஷா அஃப்ரிடியின் பந்துகளை சிக்ஸர்களுக்கு விளாசினார். சமீபத்திய பயிற்சி ஆட்டத்தில், அஃப்ரிடி வீசிய ஒரு ஓவரில் அவர் 6, 4, 6, 1, 4 என ரன்களைக் குவித்து, பழைய ஃபார்முக்கு திரும்புவதற்கான அறிகுறிகளை பாபர் அசாம் காட்டியுள்ளார்.
பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கும் டி20 உலகக் கோப்பையில் ஆகா தலைமையிலான அணி பங்கேற்கும். ஆரம்பத்தில் பாகிஸ்தானின் பங்கேற்பு சந்தேகத்தில் இருந்தது. வங்கதேசம் விலகியதால் முடிவை அரசு எடுக்கும் என கிரிக்கெட் வாரிய தலைவர் நக்வி கூறினார்.
இதுகுறித்து பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பைச் சந்தித்த நக்வி, அடுத்த வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்தார். ஆனால், தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட நக்வி, தவறுதலாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பெயரைக் குறிப்பிட்டார். இத்தவறுக்காக கடும் கேலி, விமர்சனங்களுக்கு ஆளாகி, பதிவை நீக்கி திருத்திய பதிவை வெளியிட்டார்.