மும்பை: சமகாலத்தில் மூன்று வடிவங்களுக்குமான கிரிக்கெட் போட்டியிலும் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி வருவதாக இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
அண்மை காலமாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிட்டு வந்தனர். விராட் கோலி அளவிற்கு திறமையான பேட்ஸ்மேன் என்பதுடன் விராட் கோலியின் சாதனைகளை பாபர் அசாமால் முறியடிக்க முடியும் என்று கூறினர். அதற்கேற்ப பாபர் அசாமும் டி20, ஒருநாள், டெஸ்ட் மற்றும் பிஎஸ்எல் தொடர் என்று வேறு மாதிரியான இன்னிங்ஸ்களை விளையாடி வந்தார்.

இந்த நிலையில் பாபர் அசாம் பற்றி விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். அதில், முதல்முறையாக 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் போது பாபர் அசாமை சந்தித்தேன். அந்த அணியின் இமாத் வாசிமை யு-19 நாட்களில் இருந்தே நன்றாக தெரியும். இமாத் வாசிம் என்னிடம் வந்து, பாபர் அசாம் என்னுடன் பேச விரும்புவதாக தெரிவித்தார். அதன்பின் பாபர் அசாமுடன் அமர்ந்து கிரிக்கெட் பற்றி நிறைய பேசினேன்.
முதல் நாளில் இருந்தே என் மீது அவருக்கு அதிக மரியாதை இருந்தது. தற்போதைய சூழலில் அனைத்து வடிவங்களுக்குமான சிறந்த கிரிக்கெட்டராக பாபர் அசாம் தான் இருக்கிறார். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவதோடு, சீராக ரன்கள் சேர்த்து வருகிறார். அவரின் ஆட்டத்தை நானும் வெகுவாக ரசித்து வருகிறேன்.
கடந்த 5 ஆண்டுகளாக விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிட்டு வந்த நிலையில், விராட் கோலி பாபர் அசாம் சிறந்த வீரராக இருப்பதாக கூறியுள்ளார். இது விராட் கோலியின் பெருந்தன்மையை காட்டுவதாக இருந்தாலும், ஐசிசி தொடர்களில் இருவரும் எப்படி செயல்பட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடுத்ததாக ஆசியக் கோப்பையில் 3 போட்டிகளில் மோதுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. அதேபோல் உலகக்கோப்பைத் தொடரில் அக்.14ஆம் தேதி லீக் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன. ஒருவேளை அரையிறுதிக்கு இரு அணிகளும் முன்னேறினால் மீண்டும் விளையாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.