கராச்சி: பாகிஸ்தான் அணியின் 3 வடிவங்களுக்கான கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பாபர் அசாம் மற்றும் டெஸ்ட் கேப்டன் ஷான் மசூத் இருவரிடம் பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் ஆலோசித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
சொந்த மண்ணில் வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமல்லாமல் சுமார் 3 ஆண்டுகளாக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட பாகிஸ்தான் அணி வெற்றி பெறவில்லை. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பாடு திண்டாட்டமாக இருந்து வருகிறது.

இதனிடையே பாகிஸ்தான் அணிக்குள் ஷாகின் அப்ரிடி - பாபர் அசாம் இடையிலான மோதல் பூதாகரமாக வெடித்துள்ளது. பாகிஸ்தான் அணியில் உள்ள 15 வீரர்கள் 6 குழுவினராக பிரிந்து கிடக்கிறார்கள் என்பதால், அணியில் ஒற்றுமை ஏற்படுத்த பயிற்சியாளர்கள் பெரிய முயற்சியை எடுத்து வருகின்றனர். ஆனால் வீரர்களின் ஈகோவை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றே பார்க்கப்படுகிறது.
வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது கூட பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பி மற்றும் கேப்டன் ஷான் மசூத் இடையில் மோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்நாட்டு கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. சாம்பியன்ஸ் ஒருநாள் கோப்பை தொடர் நடத்தப்பட்டு பாகிஸ்தான் அணி வீரர்கள் அடையாளம் காணப்படவுள்ளனர்.
இதற்கான 5 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 5 கேப்டன்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முகமது ரிஸ்வான், ஷாகின் அப்ரிடி, ஷதாப் கான், முகமது ஹாரிஸ் மற்றும் சாவுட் சக்கீல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனான பாபர் அசாம் கேப்டனாக நியமனம் செய்யப்படவில்லை. இது பல்வேறு குழப்பங்களை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் டெஸ்ட் கேப்டன் ஷான் மசூத் இருவரும் பொறுப்பில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 3 வடிவங்களுக்கும் சேர்த்து பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முகமது ரிஸ்வானை கேப்டனாக நியமிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஏனென்றால் உலகக்கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் நாக் அவுட் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. இன்னொரு பக்கம் சொந்த மண்ணிலேயே ஷான் மசூத்தால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை. இதனால் அனைத்து வீரர்களையும் அனுசரித்து செல்லும் ரிஸ்வானை கேப்டனாக கொண்டு வர பயிற்சியாளர்கள் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் கேப்டன்சி மாற்றம் குறித்து பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் பாபர் அசாமுடன் ஏற்கனவே பேசிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதன் மூலமாக பாகிஸ்தான் அணிக்குள் நிலவி வரும் பிரச்சனைகளை சரி செய்ய முடியும் என்று நம்பப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் அக்டோபரில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதேபோல் அடுத்த ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக ரிஸ்வான் அணியை கட்டமைப்பதற்கு போதுமான கால அவகாசம் தேவை என்பதால், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.