இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், அந்த அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரின் மத்திய ஒப்பந்தங்களை (Central Contracts) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தரம் குறைத்துள்ளது.
சமீபத்திய தொடர்களில் பாகிஸ்தான் அணியின் படுமோசமான தோல்விகள் மற்றும் வீரர்களின் சுமாரான ஆட்டத்திற்குப் பிறகே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது, வீரர்களின் மோசமான செயல்பாட்டிற்கு கொடுக்கப்பட்ட தண்டனையாகவே பார்க்கப்படுகிறது. முன்னதாக பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் 2025 ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 2025-26 சீசனுக்காக புதிதாக அறிவித்துள்ள 30 வீரர்கள் கொண்ட மத்திய ஒப்பந்தப் பட்டியலில் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு 'கேட்டகிரி ஏ' என்ற உயரிய பிரிவில் இருந்த பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும், தற்போது 'கேட்டகிரி பி' பிரிவுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் அதிர்ச்சியூட்டும் விஷயமாக, இந்த முறை 'கேட்டகிரி ஏ' பிரிவில் எந்த ஒரு வீரருக்கும் இடம் அளிக்கப்படவில்லை.
2024 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடனேயே வெளியேறியது, கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, கிரிக்கெட்டில் கத்துக்குட்டியான அமெரிக்காவிடம் அடைந்த தோல்வி மற்றும் பரம எதிரியான இந்தியாவிடம் வெற்றிபெறக்கூடிய போட்டியில் கோட்டைவிட்டது போன்றவை கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.
அதன் பிறகும் பாகிஸ்தான் அணி பல தொடர்களில் தோல்விகளை சந்தித்தது. சமீபத்தில் வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக தோல்விகளை சந்தித்து இருந்தது பாகிஸ்தான் அணி. இந்த தொடர் தோல்விகளைத் தொடர்ந்து, அணியில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற சில போட்டிகளிலும் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் போன்ற மூத்த வீரர்களின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதன் முதல் படியாகவே இந்த ஒப்பந்தத் தரம் குறைப்பு நடவடிக்கை பார்க்கப்படுகிறது. வீரர்களின் தனிப்பட்ட ஆட்டமும் இந்த முடிவுக்கு ஒரு முக்கியக் காரணம்.
டி20 போட்டிகளில் பாபர் அசாமின் ஸ்டிரைக் ரேட் மற்றும் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அவர் ஆடும் விதம் குறித்து, பாகிஸ்தான் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் சமீபத்தில் விமர்சித்திருந்தார். மேலும், வரவிருக்கும் முத்தரப்பு டி20 தொடர் மற்றும் ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியிலிருந்தும் பாபர் மற்றும் ரிஸ்வான் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாற்றங்கள் பாபர் மற்றும் ரிஸ்வானுடன் நிற்கவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் கடைசி இடத்தைப் பிடித்ததால், டெஸ்ட் கேப்டன் ஷான் மசூத் 'கேட்டகிரி பி'-யிலிருந்து 'கேட்டகிரி டி'-க்கு தரம் குறைக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா, 'கேட்டகிரி பி'-யிலிருந்து 'கேட்டகிரி சி'-க்கு மாற்றப்பட்டுள்ளார்.
இருப்பினும், சில வீரர்களுக்குப் பதவி உயர்வும் கிடைத்துள்ளது. சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது, வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப், தொடக்க ஆட்டக்காரர் சயிம் அயூப், டி20 கேப்டன் சல்மான் அலி அகா மற்றும் ஷதாப் கான் ஆகியோர் 'கேட்டகிரி சி'-யிலிருந்து 'கேட்டகிரி பி'-க்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த நடவடிக்கை, "சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே உயரிய அங்கீகாரம் கிடைக்கும், இல்லையெனில் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் நடவடிக்கை பாயும்," என்ற ஒரு தெளிவான மற்றும் கடுமையான செய்தியை வீரர்களுக்கு அனுப்பியுள்ளது. இந்த மாற்றங்கள் பாகிஸ்தான் அணியின் செயல்திறனில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.