லாகூர் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டி20 மற்றும் ஒரு நாள் கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக பாபர் அசாம் உருவெடுத்து வந்தார். இந்த நிலையில் பாபர் அசாம் கேப்டனாக செயல்பட்டு பாகிஸ்தான் அணி முக்கிய தொடர்களில் கோப்பையை வாங்கவில்லை.
இதனால் பாபர் அசாம், கடந்த 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருடன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதனை அடுத்து புதிய கேப்டனாக டி20 தொடருக்கு ஷாகின் சா ஆப்ரிடி நியமிக்கப்பட்டார்.

டெஸ்ட் கேப்டனாக சான் மசூத் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அப்ரிடி தலைமையில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் 5 டி20 போட்டி கொண்ட தொடரில் மோதியது. இதில் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றி பெற்றது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஷான் மசூத் சிறப்பாக செயல்படவில்லை. இந்த நிலையில் தற்போது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் நடைபெறவிருக்கிறது.
இந்த தொடருக்கு பாகிஸ்தான் அணி தயாராகும் விதமாக பாபர் அசாமை மீண்டும் கேப்டனாக நியமிக்க வேண்டும் என தேர்வு குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து மீண்டும் பாகிஸ்தானின் ஒரு நாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் ஐந்து மாதம் இடைவெளிக்குப் பிறகு பாபர் அசாமுக்கு தலைமை பதவி மீண்டும் திரும்பி இருக்கிறது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய தேர்வு குழு எடுத்த முடிவின்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நாக்வி, பாபர் அசாமை டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டனாக நியமித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாபர் அசாம்க்கு முதல் தொடராக நியூசிலாந்து எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடர் பாகிஸ்தானில் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெறுவது கிடையாது. இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் வீரர்கள் அந்நாட்டு ராணுவ வீரர்களுடன் பயிற்சி செய்து வருகின்றனர். பாகிஸ்தான் வீரர்களின் உடல் தகுதி மிகவும் மோசமாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.