மும்பை : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபநாசம் கடந்த சில மாதங்களாக பேட்டிங்கில் கடுமையாக தடுமாறி வருகிறார். பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வந்த பாபர் அசாம், தற்போது தமக்கு பேட்டிங்கே தெரியாது என்பது போல் விளையாடுகிறார்.
இது ரசிகர்களை மட்டுமல்லாமல் முன்னாள் கிரிக்கெட் வீரர்களையும் கடுப்படைய செய்திருக்கிறது. பாபர் அசாம் சிறப்பாக விளையாடினால் பாகிஸ்தான் அணி நிச்சயம் வெற்றி பெறும். ஆனால் பாபர் அசாம் சொதப்புவதை பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ஐசிசி உலகக் கோப்பை, டி20 உலக கோப்பை, வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் என்று தொடர்ந்து பாபர் அசாம் பெரிய அளவில் எதுவும் சாதிக்கவில்லை. இந்த நிலையில் பாபர் அசாம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பாகிஸ்தான் அணி கேப்டன் ரமிஸ் ராஜா, பாபர் அசாம் சமூக வலைத்தள பக்கத்திற்கே போகாமல் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், ரன்கள் சேர்ப்பது என்பது ஒரு விஷயம். ஆனால் பாபர் அசாம் பேட்டிங் செய்யும்போது மகிழ்ச்சியாக இருக்கிறாரா? கடந்த டெஸ்ட் போட்டியில் அவர் பேட்டிங் செய்யும்போது அவரின் பேட் பிடித்து இருக்கும் கோணம் சரியாக இல்லை. மேலும் களத்தில் அதிக நேரம் செலவிட்டால் மட்டுமே ரன் சேர்க்க முடியும். பந்துகளை அதிகமாக எதிர்கொண்டு போட்டியின் போது களத்தில் அதிகம் நேரம் நின்றாலே ரன்கள் தானாக வந்துவிடும்.
மேலும் பயிற்சி செய்யும் போது ஹூக் ஷாட், புல் ஷாட்களை அதிகமாக பாபர் அசாம் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் பந்தின் மீது அவருடைய கவனம் இருக்கும் முதலில் பாபர் அசாம் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். சமூக வலைத்தள பக்கமே பாபர் அசாம் போகக்கூடாது.
உங்களால் ரன் சேர்க்க முடியவில்லை என்றால் நிச்சயம் அது உங்களுக்கு மண அழுத்தத்தை கொடுக்கும். இரண்டாவது உங்கள் மீது உங்களுக்கே சந்தேகம் வந்துவிடும். எனவே கவலை உங்களைத் தொற்றிக் கொள்ளும். பாபர் அஸாம் முகத்தை பார்த்தாலே தெரிகிறது மன அழுத்தத்தாலும் கவலையாலும் நிறைந்து இருக்கிறது.
ரன் சேர்க்க வேண்டும் என்று அவர் கடுமையாக போராடுகிறார். ஆனால் அது நடக்கவில்லை என்பதால் விரக்தி அடைகிறார். இதனால் முதலில் பேட்டிங் எப்படி செய்வது என்பதில் கவனம் செலுத்துங்கள். பாகிஸ்தான் அணி எப்படி தோற்கிறது என்ற கவலை ஒட்டுமொத்த நாட்டிற்கும் கிடையாது. காரணம் பாபர் அசாம் சரியாக விளையாடவில்லை என்பதில்தான் அனைவரின் கவனமும், கவலையும் இருக்கின்றது.
நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால் நிச்சயம் தோல்வியடைவீர்கள். அதுவே பாபர் அசாம், இதை செய்தால் உடனடியாக நீங்கள் தலைப்பு செய்தியாக மாறிவிடுவார். பாகிஸ்தான் எப்படி தோற்கிறது? பாபர் அசாம் அணியில் என்ன செய்கிறார்? அவர் ஏன் ரன் அடிப்பதில்லை என தொடர்ந்து கேள்விகள் வரும். அதுவும் இது சமூக வலைத்தளம் ஆக்கிரமித்து இருக்கும் காலம்.
இங்கு நீங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டப் படுவீர்கள். கிரிக்கெட் என்பது பாகிஸ்தான் மக்களின் உடலில் ஓடும் ரத்தத்தில் கலந்திருக்கிறது. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து இவ்வாறு தோல்விய தழுவினால் அது நிச்சயம் மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும். வெற்றியாளர்கள் பின்னால் தான் மக்கள் எப்போதுமே இருப்பார்கள்.
பாபர் அசாம் வெற்றியாளர் என்ற பெயரை ஏற்கனவே வாங்கிவிட்டார். இதனால் தான் அவர் மீது அதிக கவனம் இருக்கிறது. பாபர் அசாம் எவ்வளவு சொதப்பினாலும் பாகிஸ்தான் அணியின் மிகத் திறமை வாய்ந்த வீரர் அவர் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.