சிட்னி: "இவர் ஜிம்பாப்வேக்கு எதிராக மட்டும் தான் அடிப்பார்.. ஆஸ்திரேலியா பிட்ச்சில் எல்லாம் இவரால் ஆட முடியாது" என்று பலரும் கலாய்த்த நிலையில் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் தொடரில் அரைசதம் அடித்து இருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் (BBL) தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடி வரும் பாபர் அசாம், ஆரம்பத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளானார். ஆனால், நேற்று நடந்த 'சிட்னி டர்பி' போட்டியில் தனது கிளாஸான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.

சனிக்கிழமை (டிசம்பர் 20) நடைபெற்ற போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சிக்ஸர்ஸ் அணிக்கு, பாபர் அசாம் தூணாக நின்றார். ஆரம்பத்தில் சற்று நிதானம் காட்டினாலும், போகப் போக பவுண்டரிகளை விரட்டினார்.
42 பந்துகளை சந்தித்த பாபர் அசாம், 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் குவித்து தனது ஃபார்மை மீட்டார்.
இந்தப் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ்அணியின் தொடக்க வீரர் டேனியல் ஹியூக்ஸ் 33 ரன்களில் வெளியேற, பாபர் அசாம் விக்கெட் கீப்பர் ஜோஷ் பிலிப் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிட்னி தண்டர் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 140 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர். ஜோஷ் பிலிப் 57 பந்துகளில் 96 ரன்கள் விளாசி சதத்தை 4 ரன்களில் தவறவிட்டார்.
இறுதியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை துரத்திய சிட்னி தண்டர் அணி, ஜாக் எட்வர்ட்ஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 151 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஜாக் எட்வர்ட்ஸ் 5 விக்கெட்களை சாய்த்தார். இதன் மூலம் பாபர் அசாம் ஆடி வரும் சிட்னி சிக்ஸர்ஸ் 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் தடுமாறிக் கொண்டிருந்தாலும், ஷாஹீன் அப்ரிடி, ரிஸ்வான், ஹாரிஸ் ராஃப், ஷதாப் கான் மற்றும் பாபர் அசாம் என ஒரு பாகிஸ்தான் பட்டாளமே பிபிஎல் தொடரில் களம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் பாபர் அசாம் இப்போது ஃபார்முக்கு திரும்பியிருப்பது அவரது ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.