லாகூர் : 2026 பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) தொடரில் பெஷாவர் சால்மி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் பாபர் அசாம், சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தன்னை விராட் கோலியுடன் ஒப்பிட்டதற்காக செய்தியாளர் ஒருவரிடம் கோபமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சீசனில் பெஷாவர் சால்மி அணி தொடக்கத்திலிருந்தே வெற்றிகளை பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த போட்டியில் ஐதராபாத் கிங்ஸ்மென் அணியை எதிர்கொண்ட அந்த அணி, 146 ரன்கள் என்ற எளிய இலக்கை கடைசி பந்தில் தான் எட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாபர் அசாம் 37 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தாலும், ஆட்டத்தை இறுதிவரை கொண்டு சென்று முடித்து வைக்க தவறிவிட்டார்.

பாபர் அசாமின் பேட்டிங் வேகம் மற்றும் போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கும் திறன் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், இந்திய வீரர் விராட் கோலியின் 'மேட்ச் பினிஷிங்' திறனுடன் பாபரின் ஆட்டத்தை பத்திரிகையாளர் ஒருவர் ஒப்பிட்டு கேள்வி எழுப்பினார்.
"நீங்களும் விராட் கோலியும் ஒரே மாதிரியான ஷாட்களை விளையாடுகிறீர்கள். ஆனால் கோலி போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கிறார், அந்த திறன் உங்களிடம் குறைவாக உள்ளதாக மக்கள் ஒப்பிடுகிறார்கள். இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என அந்த பத்திரிகையாளர் கேட்டார்.
கேள்வி முழுமையாக முடிவதற்குள் குறுக்கிட்ட பாபர், மிகுந்த கோபத்துடன், "இந்த ஒப்பீடுகளை உங்களுடனேயே வைத்துக்கொள்ளுங்கள். இதை இத்துடன் நிறுத்திவிட்டு வேறு கேள்வியை கேளுங்கள். நான் போட்டிகளை முடித்து வைப்பதில்லை என்பது உங்களின் தவறான எண்ணம்" என கடுமையாக பதிலளித்தார்.
தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் விமர்சிக்கப்பட்டாலும், கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரராக அவர் திகழ்கிறார். இதுவரை 145 டி20 போட்டிகளில் 4500க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 128 ஆக இருப்பது விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

பி.எஸ்.எல் தொடர் வரலாற்றில் 3800க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். நடப்பு சீசனில் இந்த விமர்சனங்களுக்கு தனது பேட் மூலமாகவே அவர் பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.