கராச்சி: பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகுவதாக அறிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி 9 லீக் போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் நிறைவு செய்தது. இதனால் அரையிறுதி சுற்றுக்கு கூட பாகிஸ்தான் அணியால் முன்னேற முடியவில்லை. குறிப்பாக ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்திய மைதானங்களில் விளையாடிய அனுபவங்கள் இல்லாததும், அவர்களுக்கு இந்திய மைதானங்களில் சிறப்பாக செயல்படும் ஸ்பின்னர்கள் இல்லாததும் தோல்விக்கு மிகமுக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் பேட்டிங்கில் சில போட்டிகளிலும் சொதப்பியதோடு, முக்கிய சூழல்களில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் சொதப்பலான முடிவுகளை எடுத்தார்.
இதனிடையே உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போதே பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதவியை ராஜினாமா செய்தார். இதன்பின் பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு உறுப்பினர்கள் மொத்தமாக நீக்கப்பட்டனர்.
இதனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமும் பதவியில் இருந்து விலக உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் 3 வகையான கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார். இதுகுறித்து பாபர் அசாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தில் இருந்து பாகிஸ்தான் அணியை வழிநடத்த அழைக்கப்பட்டது இப்போது நினைவில் இருக்கிறது.

கடந்த 4 ஆண்டுகளில் வெற்றி, தோல்வி, ஏற்றம், இறக்கம் என்று அனைத்து சோதனைகளையும் சந்தித்தேன். ஆனால் பாகிஸ்தான் அணி மீதான மதிப்பை உயர்த்தவும், பெருமையடைய செய்யவும் உண்மையான போராடினேன். ஒயிட் பால் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை நம்பர் 1 இடத்திற்கு அழைத்து சென்றேன். நிச்சயம் சக வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என்று அனைவரின் கூட்டு முயற்சிக்கும் கிடைத்த பலன் தான் அது. தற்போது 3 வகையான கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்.
எனக்கு கடினமான முடிவு என்றாலும், இதற்கு சரியான நேரம் இதுதான் என்று நினைக்கிறேன். அதேபோல் பாகிஸ்தான் அணிக்காக 3 வகையான கிரிக்கெட் போட்டிகளில் வீரராக விளையாடுவேன். அடுத்த கேப்டனுக்கு எனது முழு ஆதரவையும், அர்ப்பணிப்பையும் வழங்குவேன். இத்தனை காலமாக என் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பை வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனால் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.