துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரின் இரண்டாவது போட்டியில், பாகிஸ்தான் அணி எளிதாக வெற்றி பெற்றாலும், அந்த அணியின் அதிரடி வீரர் முகமது ஹாரிஸ் வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்து, ஆத்திரத்தில் தனது பேட்டை உடைத்தெறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. போட்டியின் இறுதிக் கட்டத்தில், 7வது வீரராகக் களமிறங்கிய முகமது ஹாரிஸ் அதிரடியாக ஆடி ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ஒரு மோசமான ஷாட் ஆடி, டீப் தேர்ட் மேன் திசையில் நின்றிருந்த ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால் ஏற்பட்ட விரக்தியில், பெவிலியன் திரும்பிய முகமது ஹாரிஸ், தனது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கையில் இருந்த பேட்டை ஆக்ரோஷமாக தரையில் அடித்து உடைத்தார். இந்தச் சம்பவம் கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலானது. சில ரசிகர்கள் அவரது விரக்தியைப் புரிந்துகொள்வதாகக் கூறினாலும், பலர் இது ஒரு முதிர்ச்சியற்ற செயல் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
முகமது ஹாரிஸின் இந்தச் செயலுக்குப் பின்னால் மற்றொரு காரணமும் இருப்பதாகப் பாகிஸ்தான் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த முத்தரப்புத் தொடர் தொடங்குவதற்கு முன்பு, பாகிஸ்தான் டி20 அணியிலிருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர் ஒருவர் ஹாரிஸிடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஹாரிஸ், "பாகிஸ்தானுக்காக பாபரும், ரிஸ்வானும் நிறைய சாதித்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒரு புதிய தரத்தை உருவாக்க வேண்டுமென்றால், ஜூனியர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். பாபர் அசாம் டி20 போட்டிகளில் இன்னும் வேகமாக ஆட வேண்டும்" என்று மறைமுகமாக விமர்சித்திருந்தார்.
முன்னாள் கேப்டனைப் பற்றி ஹாரிஸ் தெரிவித்த இந்தக் கருத்து, பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தேவையில்லாமல் பாபரை விமர்சித்ததாக அவருக்குக் கண்டனங்கள் குவிந்தன. இந்நிலையில், தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வரும் ஹாரிஸ், தற்போது களத்திலும் தனது கட்டுப்பாட்டை இழந்து பேட்டை உடைத்திருப்பது, அவருக்கான விமர்சனங்களை மேலும் அதிகரித்துள்ளது. "பாபரை சீண்டியதன் விளைவுதான் இது" என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.