லாகூர்: பாகிஸ்தான் சூப்பர் லீக் 2026 தொடரில் லாகூர் கலந்தர்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தில்லுமுல்லு வேலையில் ஈடுபட்டதாக லாகூர் அணியின் கேப்டன் ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் மற்றும் ஃபகார் ஜமான் ஆகியோர் மீது புகார் எழுந்துள்ளது.
டேவிட் வார்னர் தலைமையிலான கராச்சி கிங்ஸ் மற்றும் ஷாஹீன் அப்ரிடி தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ் அணிகள் மோதிய இந்தப் போட்டி கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாகச் சென்றது. கடைசி 6 பந்துகளில் கராச்சி அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது லாகூர் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் பந்துவீசத் தயாரானார். பந்துவீசும் முன் அவர் கேப்டன் ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஃபகார் ஜமான் ஆகியோருடன் மைதானத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இவர்களது செயல்பாட்டில் சந்தேகம் அடைந்த கள நடுவர் ஃபைசல் அப்ரிடி, உடனடியாகப் பந்தை வாங்கி ஆய்வு செய்தார். மற்றொரு நடுவர் ஷர்புத்துல்லாவுடன் ஆலோசனை நடத்திய பிறகு, லாகூர் அணி வீரர்கள் திட்டமிட்டுப் பந்தின் தன்மையை மாற்றியது (Ball Tampering) உறுதி செய்யப்பட்டது. இதற்காக லாகூர் அணிக்கு 5 ரன்கள் அபராதம் (Penalty) விதிக்கப்பட்டது.
இதனால் கராச்சி அணியின் வெற்றி இலக்கு 14 ரன்களில் இருந்து 9 ரன்களாகக் குறைந்தது. மேலும், சேதப்படுத்தப்பட்ட பந்துக்கு மாற்றாகப் புதிய பந்து வழங்கப்பட்டது. இந்தத் திடீர் திருப்பத்தால் அதிர்ச்சியடைந்த ஷாஹீன் அப்ரிடி நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் நடுவர்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர்.
வெற்றி இலக்கு 9 ரன்களாகக் குறைந்த நிலையில், கடைசி ஓவரில் அப்பாஸ் அப்ரிடி ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாச கராச்சி கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கராச்சி அணி 4 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

போட்டிக்குப் பிறகு இது குறித்துப் பேசிய ஷாஹீன் அப்ரிடி, "இது பற்றி எனக்குத் தெரியாது. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த பிறகே எதையும் சொல்ல முடியும். நடுவர்கள் 5 ரன்களைக் குறைத்ததை எங்களால் மாற்ற முடியாது" என மழுப்பலாகப் பதிலளித்தார். அதேபோல் அந்த அணியின் சிக்கந்தர் ராசா பேசுகையில், "நாங்கள் பந்தைச் சேதப்படுத்தவில்லை. சட்டைக்குள் வைத்துப் பந்தைத் துடைக்கக் கூடாது என்று மட்டுமே நடுவர்கள் எங்களிடம் கூறினர்" எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே பல குழப்பங்கள் நீடித்து வருகிறது. மறுபுறம் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சொதப்பும் பாகிஸ்தான் வீரர்களை அந்நாட்டு ரசிகர்களே மீம்ஸ் போட்டு கேலி செய்து வருகிறார்கள். இப்போது இந்த பந்து சேதப் புகார் பாகிஸ்தான் வீரர்களுக்கு மேலும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.