கிங்ஸ்டவுன் : நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் 27வது லீக் போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி கேப்டன் எட்வர்ட்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய வங்கதேசம் அணி 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது, அனுபவ வீரர் ஷகிப் அல் ஹசன் சிறப்பாக விளையாடினார். இதனால் வங்கதேச அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஷகிப் அல் ஹசன் 46 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார்.

இதன்பின் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு லிவிட் - மேக்ஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 22 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், லிவிட் 18 ரன்களிலும் ஆட்டமிழக்க, தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான மேக்ஸ் 12 ரன்களில் வெளியேறினார். இதனால் நெதர்லாந்து அணி 6 ஓவர்களில் 36 ரன்கள் சேர்த்திருந்தது. பின்னர் ஏங்கல்பிரட் - விக்ரம்ஜித் சிங் கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை சேர்த்தது. அதிரடியாக ஆடிய விக்ரம்ஜித் சிங் சிக்சர்களாக விளாசி தள்ளினார்.
ஆனால் மஹ்மதுல்லா வீசிய முதல் ஓவரிலேயே அட்டாக் செய்ய முயற்சித்த விக்ரம்ஜித் சிங் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பின் கேப்டன் எட்வர்ட்ஸ் களத்திற்குள் வர, ஆட்டம் பரபரப்பானது. இவரும் ஏங்கல்பிரட்-ம் இணைந்து நெதர்லாந்து அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். இதனால் நெதர்லாந்து அணி 14 ஓவர்களில் 104 ரன்களை எட்டியது. அப்போது ரிஷாத் ஹொசைன் வீசிய 15வது ஓவரில் ஏங்கல்பிரட் 33 ரன்களிலும், தொடர்ந்து வந்த பேஸ் டீ லீட் டக் அவுட்டாகியும் வெளியேறினர்.
இதனால் நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 49 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது முஸ்தஃபிசுர் ரஹ்மான் வீசிய முதல் பந்திலேயே கேப்டன் எட்வர்ட்ஸ் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஆட்டத்தில் வங்கதேச அணியின் கைகள் ஓங்கியது. இதன்பின் பிரிங்கிள் - வான் பீக் கூட்டணி இணைந்தது. ஆனால் ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறிய சூழலில், வான் பீக் 2 ரன்களில் வெளியேறினார். இதனால் நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்பட்டது.
19வது ஓவரை வீச மீண்டும் முஸ்தஃபிசுர் ரஹ்மான் வந்தார். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வங்கதேசம் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக வங்கதேச அணி சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. அதேபோல் இலங்கை அணி குரூப் சுற்றுடன் வெளியேறியுள்ளது.