55/5 என்ன டா இது நியூசிலாந்துக்கு வந்த நிலைமை.. 2வது டெஸ்டில் பாய்ந்து அடிக்கும் வங்கதேசம்
மிர்பூர் : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தது அந்த அணியின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் பலரும் வங்கதேச அணியை கடுமையாக சாடி இருந்தார்கள்.
இந்த நிலையில் வங்கதேச அணி நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியை கைப்பற்ற வேண்டிய உத்வேகத்தில் களமிறங்கியது.

மிர்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 172 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய வங்கதேசம் 300 மேல் குவிக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அது ஏமாற்றமாக அமைந்தது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
இந்த நிலையில் நியூசிலாந்து அணி தொடரை சமன் செய்யும் உத்வேகத்துடன் தங்களுடைய முதல் இன்னிங்சில் களம் இறங்கியது. ஆனால் நடந்ததோ தலைக் கீழ் தான். வங்கதேச அணி வீரர்கள் துல்லியமாக பந்துவீசி நியூசிலாந்து வீரர்களை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கினார்கள். அந்த அணியின் தொடக்க வீரர் டாம் லாத்தம் நான்கு ரன்களிலும் கான்வே 11 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் 13 ரன்களில் வெளியேறினார்.
இதையடுத்து ஹென்ரி நிக்கோலஸ் 1 ரன்னிலும், விக்கெட் கீப்பர் டாம் பிளண்டல் டக் அவுட்டாகியும் வெளியேற நியூசிலாந்து அணி 46 ரன்களுக்கு ஐந்து விக்கெட் இழந்து தடுமாறியது. இதனை அடுத்து டேரல் மிச்சல் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஜோடி விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணி 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது. மழை வந்து குறிக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. வங்கதேச தரப்பில் மெஹதி ஹசன் மூன்று விக்கெட்டுகளையும் தாய்ஜூல் இஸ்லாம் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
Story first published: Thursday, December 7, 2023, 18:09 [IST]
Other articles published on Dec 7, 2023


Click it and Unblock the Notifications