“பாகிஸ்தானுக்கு அவமானம்.. இந்தியாவை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்”.. பொங்கி எழுந்த கம்ரான் அக்மல்
இஸ்லாமாபாத்: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 0-2 என்ற கணக்கில் 'ஒயிட்வாஷ்' ஆகி படுதோல்வி அடைந்திருப்பது அந்நாட்டு கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெட்கக்கேடு என முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
சில்கெட் நகரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்திடம் தோற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி தொடரையும் இழந்து படுதோல்வியைச் சந்தித்துள்ளது. முதல் போட்டியில் 104 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வென்றிருந்தது. இந்தத் தோல்வி குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய கம்ரான் அக்மல், பாகிஸ்தான் அணியின் நிர்வாகம் மற்றும் வீரர்களின் மனநிலையைத் தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.

"பாகிஸ்தான் வீரர்களுக்கு வெட்கமே கிடையாது. பி.எஸ்.எல் (PSL) டி20 தொடர் என்றால் ஒரு வீரருக்கு கூட காயம் ஏற்படாது, அனைவரும் முழு உடல் தகுதியுடன் இருப்பார்கள். ஆனால் உள்நாட்டுப் போட்டிகள் அல்லது நாட்டுக்காக விளையாடும்போது மட்டும் பிட்னஸ் குறித்த மருத்துவக் கடிதங்கள் வரத் தொடங்கும். வீரர்களின் மனநிலை இப்படி இருந்தால் கிரிக்கெட் எப்படி முன்னேறும்?" என அக்மல் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்
இந்திய அணியை உதாரணமாகக் காட்டிய அக்மல், "இந்திய அணியில் ஷிகர் தவான், அஜின்கியா ரகானே, புஜாரா போன்ற ஜாம்பவான்கள் கூட அணிக்குத் தேவையில்லை என்றால் நீக்கப்படுகிறார்கள். அங்கே அணி தான் முக்கியம், தனிநபர்கள் அல்ல. ஆனால் பாகிஸ்தானில் திறமையை விட நட்புக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கிரிக்கெட் தெரியாத நபர்களின் ஈகோ மற்றும் தகுதியற்ற வீரர்களைத் தேர்வு செய்யும் முறையே இந்தத் தோல்விக்குக் காரணம்" என்று விளாசினார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகளின் அதிகாரப் போக்கையும் அவர் சாடினார். 2 கி.மீ ஓட்டத்தில் அரை நிமிடம் தாமதமானால் ஒரு வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கும் நிர்வாகம், தங்களது தவறான முடிவுகளுக்குப் பொறுப்பேற்பதில்லை என்றார். கடினமான முடிவுகளை எடுக்காவிட்டால் இன்னும் 5 ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது எனத் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார். வெளிநாட்டு மண்ணில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 7 டெஸ்ட் போட்டிகளில் தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
