செஞ்சூரியன்: வங்கதேசம், தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் தொடங்கியது.டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் கேப்டன் தமிம் இக்பால், லிதான் தாஸ் பொறுப்புடன் விளையாடினர்.

தமிம் இக்பால் 41 ரன்கள் சேர்க்க, லிதான் தாஸ் அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்க தொடரில் விளையாட மாட்டேன் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய ஷகிபுல் ஹசன், அபாரமாக விளையாடி அதிகபட்சமாக 77 ரன்கள் சேர்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முஸ்பிகுர் ரஹிம் 9 ரன்களில் வெளியேறினார்.
இறுதியில் யாஷிர் அலி 50 ரன்களும், முகமதுல்லா 25 ரன்களும் எடுக்க 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி 314 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தது.இதனையடுத்து தென்னாப்பிரிக்க அணி 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. மாலன் 4 ரன்களிலும், வெர்ரரைன் 21 ரன்ளிலும் ஆட்டமிழக்க மார்க்ரம் டக் அவுட்டாகி வெளியேறினார்.
கேப்டன் பெவுமா 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். வெண்டர் டுசன் ,மில்லர் ஜோடி இணைந்து கடுமையாக போராடியது. வெண்டர்டுசன் 86 ரன்களும், டேவிட் மில்லர் 79 ரன்களும் எடுக்க தென்னாப்பிரிக்க இணி 276 ரன்களில் ஆட்டமிழந்தது.
இதன் மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வங்கதேச அணி, வரலாற்றில் முதல் முறை தென்னாப்பிரிக்க மண்ணில், அந்த அணியை வீழ்த்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்தியாவே ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாத நிலையில் வங்கதேச அணி வென்றுள்ளது.