நியூயார்க் : டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள தென்னாப்பிரிக்க அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி தடுமாறியது.
இந்த நிலையில் அந்த அணி வீரர்களின் அபார பில்டிங்கால் தற்போது வெற்றி பெற்றிருக்கிறது. கடைசி இரண்டு பந்துக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில் மகமதுல்லா அடித்த பந்தை சிக்ஸர் லைனில் ஏய்டன் மார்க்கரம் பிடித்த கேட்ச் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வெற்றிக்கு பிறகு பேசிய தென்னாபிரிக்க கேப்டன் எய்டன் மார்க்கரம் போட்டிகள் கடும் சவால்களை கொடுப்பதை கத்தியின் மேல் நடப்பது போல் இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், எப்போதுமே டி20 கிரிக்கெட்டில் கடைசி ஓவர்களில் நிச்சயம் பதற்றமாக இருக்கும். அது கத்தியின் மேல் நடப்பது போல் இருக்கும்.
இதன் மூலம் மனதளவில் நிச்சயம் வீரர்கள் சோர்வாக உணர்வார்கள். எனினும் இதுபோன்ற சூழலில் இருப்பது நிச்சயம் நன்றாகத்தான் இருக்கின்றது. சில சமயம் நாம் வெற்றியின் பக்கத்தில் நிற்போம். சில சமயம் தோல்வியடைவோம். ஆனால் இது ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக அமையும். 19.5 ஓவரில் கேசவ் மகராஜ் வீசிய பந்து எங்கு வேண்டுமானாலும் சென்று இருக்கலாம்.
கொஞ்சம் இரண்டு மீட்டர் தாண்டி இருந்தால் நிச்சயம் ஆட்டத்தின் முடிவு மாறி இருக்கும். நாம் வேறு மாதிரி பேசிக் கொண்டு இருப்போம். இன்றைய ஆட்டத்தில் சில விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக நடந்தது. இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதை அதிர்ஷ்டவசமாக நான் உணர்கின்றேன். முடிந்தவரை இது போன்ற சூழலில் போட்டியை கடைசிவரை இழுத்துச் செல்ல வேண்டும் என நினைக்கின்றேன்.
இன்றைய ஆட்டத்தில் எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டார்கள். நாங்கள் கடைசி வரை ஆட்டத்தை இழுத்துச் செல்ல நினைத்தோம். அப்போது யாரை பந்து வீச வைப்பது என்ற யோசனை வந்தபோது கேசவ் மகாராஜிடம் வழங்கினோம். நாங்கள் எப்போதும் கிளாசன், டேவிட் மில்லரை மிகவும் நெருக்கடிக்கு ஆளாக்கின்றோம். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்கிறார்கள். அவர்கள் தந்த முக்கியமான பார்ட்னர்ஷிப் எங்களுக்கு வெற்றியை தேடி கொடுத்து இருக்கிறது என்று எய்டன் மார்க்கரம் கூறியுள்ளார்.