மிர்பூர் : தென்னாப்பிரிக்கா, வங்கதேச அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மிர்பூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்க அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டம் காரணமாக அங்கு எந்தவித கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது அங்கு புதிய அரசு பதவி ஏற்று இருப்பதால் அமைதி நிலவுகிறது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா அணி தற்போது வங்கதேசத்தில் விளையாடி வருகிறது.

இந்த சூழலில் வங்கதேச அணியின் நட்சத்திர வீரரான ஷகிபுல் ஹசன் தென்னாப்பிரிக்க தொடரில் பங்கேற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார். தாம் சொந்த நாட்டு மக்கள் முன்பு விளையாடி விலக அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். இதனை அடுத்து அவர் முதல் டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் ஷகிபுல் ஹசன் அணியை விட்டு நீக்க வேண்டும் என வங்கதேச மாணவர் அமைப்பு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் ஒன்று எழுதியது.
ஷகிபுல் ஹசனை சேர்த்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது. இதனை அடுத்து அணியில் சேர்க்கப்பட்ட மறுநாளே மீண்டும் நீக்கப்பட்டார். இதனால் தற்போது துபாயில் தங்கி இருக்கிறார். இந்த நிலையில் ஷகிபுல் ஹசன் அணியில் இல்லாத நிலையில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அப்போது ஷகிபுல் ஹசனுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் மைதானத்திற்கு முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஷகிபுல் ஹசனை அணியில் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த தருணத்தில் தான் ஷகிபுல் ஹசன் அணியில் சேர்க்கக்கூடாது என வலியுறுத்திய கும்பல் மைதானத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டது. ஷகிபுல் இல்லாமலே அணி நன்றாகத்தான் இருக்கிறது எனக் கூறி அவர்கள் போராட்டக்காரர்களை அடித்து விரட்டினர். இதனால் மைதானத்திற்கு முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து மைதானத்திற்கு முன்பு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.