மிர்ப்பூர் : வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் வென்ற இலங்கை அணி, தங்களின் கைகளில் வாட்ச் கட்டும் இடத்தை காண்பித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் ரைவல்ரியை போல் வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையிலான ரைவல்ரியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகக்கோப்பை தொடரின் போது இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது, அனுபவ வீரர் மேத்யூஸை வங்கதேச அணி டைம் அவுட் முறையில் வீழ்த்தியது. அதாவது க்ரீஸிற்கு தாமதமாக வந்ததன் காரணமாக மேத்யூஸ் அவுட் கொடுக்கப்பட்டார்.

இந்த வகையில் ஆட்டமிழந்த முதல் சர்வதேச வீரர் இவர் தான். அப்போதே இலங்கை அணி கடுமையான எதிர்வினையாற்றியது. போட்டி முடிவடைந்த பின் வங்கதேச வீரர்களுடன் கைகளை கூட குலுக்காமல் பெவிலியன் சென்றனர். அதேபோல் நீண்ட ஆண்டுகளாகவே இவர்களுக்கு இடையில் நாகினி டான்ஸ் பஞ்சாயத்து ஓடி கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் வங்கதேசத்திற்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் போட்டியில் இலங்கை அணியும், 2வது போட்டியில் வங்கதேச அணியும் வென்றன. இந்த நிலையில் தொடரை முடிவு செய்யும் 3வது டி20 நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 55 பந்துகளில் 86 ரன்களை விளாசினார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. இலங்கையின் ஜூனியர் மலிங்கா துஷாரா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த, வங்கதேச அணி 32 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்கு சென்றது. இறுதியாக 19.4 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்து வங்கதேச அணி தோல்வியை சந்தித்தது. இதனால் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்த வெற்றிக்கு பின் கோப்பையை பெற்ற இலங்கை அணி வீரர்கள் ஒட்டுமொத்தமாக கூடி, தங்களின் கைகளில் வாட்ச் கட்டும் இடத்தை காண்பித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன் மூலம் நேரடியாக வங்கதேச மண்ணில் வங்கதேச அணியை வீழ்த்தி மேத்யூஸ் விக்கெட்டுக்கு பழீதீர்த்ததாக இலங்கை ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இலங்கை அணியினரின் கொண்டாட்டம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.